சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலியானவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்
சிவகாசி: சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். 7 பெண்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஸ்டாண்டர்டு பட்டாசு ஆலையில் சனிக்கிழமை காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பெண் தொழிலாளர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 7 பெண் தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிவகாசி சிறுகுளம் காலணியை சேர்ந்த பழனிசாமி மகன் ஜெய்சங்கர்(57), பூத்தாயம்மாள் நகரை சேர்ந்த ரவீந்திரன் மனைவி ராஜரத்தினம்(56) ஆகியோர் எம்.புதுப்பட்டி அருகே நெடுங்குளத்தில் ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகின்றனர். சனிக்கிழமை காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அறை எண்:14-ல் பட்டாசுக்கு ரசாயன கலவை செலுத்தும் (புல்லிங்) பணியின் போது உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது.
இதில், எம்.சொக்கலிங்காபுரத்தை சேர்ந்த விஜயகுமார் மனைவி கலைச்செல்வி (33), சொக்கம்பட்டியை சேர்ந்த மாரிமுத்து மனைவி மாரியம்மாள்(51), கூமாபட்டியை சேர்ந்த ராமர் மனைவி திருவாய்மொழி(45) ஆகியோர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் காயமடைந்த கூமாபட்டியை சேர்ந்த கோமதி (55), ராபியா பீவி(50), பாத்திமாமுத்து(65), கோபாலன்பட்டி முனியம்மாள்(50), எம்.புதுப்பட்டியை சேர்ந்த பாக்கியலட்சுமி(55) உட்பட 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது: விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், நெடுங்குளம் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (26.4.2025) காலை சுமார் 10.45 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் எம் புதுப்பட்டி, சொக்கம்பட்டியைச் சேர்ந்த திருமதி.மாரியம்மாள் (வயது 51) க/பெ.மாரிமுத்து, எஸ் கொடிக்குளம், கூமாப்பட்டியைச் சேர்ந்த திருமதி.திருவாய்மொழி (வயது 48) க/பெ.ராமர் மற்றும் எம் சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த திருமதி.கலைச்செல்வி (வயது 35) க/பெ.விஜயகுமார் ஆகிய மூன்று நபர்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பாக்கியலட்சுமி (வயது 55) க/பெ.துரைராஜ், கோமதி (வயது 55), பாத்திமுத்து (வயது 55) க/பெ.அப்துல் காதர், திருமதி.ராபியா பீவி (வயது 50) க/பெ.தீன்முகம்மது, திருமதி.ராமசுப்பு (வயது 43) க/பெ.அன்புசெல்வன், லட்சுமி (வயது 40) க/பெ.தங்கப்பாண்டியன், முனியம்மாள் (வயது 40), க/பெ.ஆறுமுகம் ஆகியோருக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications