திடீரென சிவகுமார் திமுகவுக்கு எதிராக பேசியதற்கும், கருப்பு ரிலீஸ் சலுகைக்கும் தொடர்பா?
சென்னை: எப்போதுமே திமுக ஆதரவுள்ள சிவக்குமார், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வாக்களித்துவிட்டு திமுகவை மறைமுகமாக விமர்சித்து பேசியிருந்தார். திடீரென மாற்றி பேசியது ஆளும் கட்சிக்கு எதிரான அலை வீசுவதை அன்றே கணித்தவிட்டதால் இப்படியாக பேசுவதாக பலரும் யூகித்து இருந்தனர். தற்போது சூர்யாவின் கருப்பு படத்திற்கு எந்த சிக்கலும் இன்றி தமிழக அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுத்துள்ளதை அன்று அவர் பேசியதோடு இணைத்து சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் விவாதமாக்கியுள்ளனர்.
சூர்யா நடித்துள்ள "கருப்பு" படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் (மே 14 மற்றும் 15 ம் தேதி) ஆகிய இரு நாட்களில் ஒரு காட்சியை கூடுதலாக திரையிடலாம் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

"கருப்பு" படம் சிறப்பு காட்சிக்கு அனுமதி
அதன்படி 'கருப்பு' படத்தின் சிறப்பு காட்சியை காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை, அதிகபட்சமாக 5 காட்சிகள் வரை திரையிடலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், சூர்யாவின் கருப்பு படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பது சமூக வலைத்தளங்களில் பல்வேறு விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில், சூர்யா மற்றும் அவரது தந்தை சிவக்குமார் ஆகியோர் திமுகவுடன் அனுசரனையாக நடந்து கொள்பவர்கள் என்ற ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சித்த சூர்யா, திமுக ஆட்சியின் போது பெரிதாக எந்த விமர்சனங்களையும் முன்வைத்தது இல்லை. அதேபோல, சிவக்குமாரும் விஜய்யின் அரசியல் வருகை பற்றி அவ்வப்போது மறைமுகமாக சில விமர்சனங்களை முன்வைத்தார்.
திமுகவை மறைமுகமாக அட்டாக் செய்த சிவக்குமார்
ஆனால், கடந்த சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று சிவக்குமார் குடும்ப அரசியல் குறித்த விமர்சனங்களை முன்வைத்தார். சிவக்குமார் கூறுகையில், "என்னைப் பொறுத்தவரை யார் ஆட்சிக்கு வந்தாலும் பரவாயில்லை. ஆனால் TASMAC கடைகளை உடனே மூட வேண்டும். குடிமக்களை குடிகாரர்களாக மாற்றியது போதும். தன் குடும்பத்தோடு கோடி கோடியாக சொத்துகளை குவிக்காமல் கடைக்கோடி மக்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றனும்.. இதுதான் என்னுடைய வேண்டுகோள் என்று பேசியிருந்தார்.
எப்போதுமே திமுக ஆதரவுள்ள சிவக்குமார், திடீரென மாற்றி பேசியது ஆளும் கட்சிக்கு எதிரான அலை வீசுவதை அன்றே கணித்தவிட்டதால் இப்படியாக பேசுவதாக பலரும் யூகித்து இருந்தனர். சிவக்குமார் வாக்குப்பதிவு நாளான அன்றே திமுகவை மறைமுகமாக அட்டாக் செய்த சூழலில், தற்போது சூர்யாவின் கருப்பு படத்திற்கு எந்த சிக்கலும் இன்றி தமிழக அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுத்துள்ளதையும் இணைத்து சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் விவாதமாக்கியுள்ளனர்.
கருப்பு படம் ரிலீஸ்
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள கருப்பு படத்தை Dream Warrior Pictures நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பல மொழி நடிகர்கள் இணைந்திருப்பதால், இந்த படம் பான்-இந்தியா அளவில் கவனம் பெற்றுள்ளது. பொதுவாக பெரிய எதிர்பார்ப்பு உள்ள படங்களுக்கே சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படும் நிலையில் "கருப்பு" படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications