மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கு.. இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ உள்ளிட்ட 6 போலீசார் சஸ்பெண்ட்!
மதுரை: மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கில் 6 காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒரு ஆய்வாளர், ஒரு எஸ்.ஐ, 4 காவலர்களை பணியிடை நீக்கம் செய்து ராமநாதபுரம், சிவகங்கை சரக டிஐஜி மணிவண்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரியான ஆகாஷ் டெலிசன். இவர் பக்கத்து ஊரில் இருப்பவர்களிடம் தகராறில் ஈடுபட்டு அவர்களை கொலை செய்ய முயன்றதாக கூறி கடந்த மார்ச் 6 ஆம் தேதி அன்று மானாமதுரை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

கைது நடவடிக்கையின் போது தப்ப முயன்ற போது ஆகாஷ் தவறி கீழே விழுந்துள்ளதாகவும், இதில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆகாஷ் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த நிலையில் மார்ச் 8-ஆம் தேதி ஆகாஷ் சிகிச்சையில் இருந்தபோது உயிரிழந்தார்.
இதையடுத்து, ஆகாஷின் மரணத்திற்கு நீதி கேட்டு அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் பேரில் ஆகாஷின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல்வர் தலைமையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
ஆகாஷின் மரணம் குறித்து சிபிசிஐடி அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது மகன் உயிரிழப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் 16 காவலர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆகாஷின் தந்தை மனுத் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், ஆகாஷ் மரண வழக்கில் 6 காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காவல் ஆய்வாளர் திலீபன், எஸ்.ஐ குகன், 4 காவலர்கள் தெய்வேந்திரன், மனோகரன், சரத், காளீஸ்வரன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து ராமநாதபுரம், சிவகங்கை சரக டிஐஜி மணிவண்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications