குப்பை தொட்டியில் கிடந்த மனித மண்டை ஓடு.. அலறி ஓடிய துப்புரவு பணியாளர்.. சென்னையில் பரபரப்பு
சென்னை: சென்னை அடையாறு பகுதியில் உள்ள குப்பை தொட்டி ஒன்றில் மண்டை ஓடு உட்பட மனித எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த மண்டை ஓடு அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை அடையாறு பகுதியில் உள்ள சாஸ்திரி நகரின் 6வது குறுக்குத் தெருவில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. அங்கு சாலை சந்திப்பில் இருந்த குப்பை தொட்டியில் தினமும் காலை சென்னை மாநகராட்சி தனியார் நிறுவனத்தின் தூய்மை பணி ஒப்பந்த ஊழியர் ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த தங்கம் பழனி குப்பைகளை அள்ளி செல்வது வழக்கம்.
வழக்கம் போல இன்றும் அவர் குப்பைகளை அள்ளுவதற்காக அங்கு வந்து இருக்கிறார். தொட்டியில் இருந்து குப்பைகளை அகற்றும் போது மர்ம பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பை
சாதாரண பிளாஸ்டிக் பை என்றுதான் முதலில் நினைத்து அதை தூக்கி இருக்கிறார். ஆனால் பையை தூக்கும் போது அது அதிக எடையுடன் இருந்துள்ளது. அதேபோல் உள்ளே பெரிய அளவில் பொருட்கள் இருந்துள்ளது. அதோடு பையை சுற்றி இறுக்கமாக கயிறும் கட்டப்பட்டு இருந்தது. பையை திறக்க முடியாதபடி மிகவும் பாதுகாப்பாக கயிறை வைத்து அதை கட்டி இருக்கிறார்கள்.

சந்தேகம்
இதனால் உள்ளே என்ன இருக்கிறது தூய்மை பணியாளர் தங்கம் பழனி சந்தேகம் அடைந்துள்ளார். இதையடுத்து பையை திறந்து பார்த்தவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். உள்ளே பைக்குள் மனித மண்டை ஓடும், எலும்புக்கு கூடும் இருந்தது. கருப்பு பை ஒன்றில் தலை உள்ளிட்ட பாகங்கள் இருந்துள்ளன. இன்னொரு வெள்ளை பையில் கால் எலும்புகள் இருந்துள்ளன.

பழைய
மஞ்சள் நிறத்தில் மோசமான நிலையில் இந்த எலும்பு கூடுகள் காணப்பட்டுள்ளன. இதை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்த தூய்மை பணியாளர் தங்கம் பழனி பையை சட்டென தூக்கி வீசி சில அடி தூரம் ஓடி சென்றார். அதன்பின் நிதானத்தை வரவழைத்துக் கொண்ட அவர் உடனடியாக சாஸ்திரிநகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மனித எலும்புக்கு கூட்டை கைப்பற்றி தடயவியல் அனுப்பி வைத்து உள்ளனர்.

எப்படி
இங்கே எலும்புக் கூடு வந்தது எப்படி, இது கொலை செய்யப்பட நபரின் எலும்புக்கூடா என்று போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர். அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். குப்பை தொட்டிக்கு அருகில் உள்ள வீடுகள், அலுவலகங்களில் சிசிடிவி இருந்தால் அதை கைப்பற்றி அதில் இருந்து எலும்புக் கூட்டை வீசிய நபரை கண்டுபிடிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

அதிர்ச்சி
அதே சமயம் மாந்தரீகம், சூனியம் செய்யும் நபர்கள் யாராவது இப்படி எலும்புக்கு கூட்டை தூக்கி எறிந்துவிட்டு சென்றுள்ளார்களா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதேபோல் இது பெண் உடலா, ஆண் உடலா என்றும் சோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். தடயவியல் சோதனை முடிவில் இது தொடர்பாக முக்கிய விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் அடையாறு பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications