சென்னை விமான நிலையத்தில் புது வசதி.. இனி பயணிகளுக்கு சோர்வு இருக்காது.. வந்தாச்சு கேப்சூல் ரூம்கள்
சென்னை: களைப்பாக வரும் பயணிகள் ஓய்வெடுக்க வசதியாக சென்னை விமான நிலையத்தில் சிறிய ரக ஓய்வு அறைகள் எனப்படும் 'கேப்சூல்' ரூம்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
Recommended Video
பொதுவாக விமான நிலையங்களுக்கு இரண்டு விதமான பயணிகள் வருவார்கள். ஒருதரப்பினர் விமானத்தில் இருந்து இறங்கியதும் தாங்கள் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு சென்றுவிடுவார்கள். அதேசமயத்தில், மற்றொரு தரப்பினர் ஒரு விமானத்தில் வந்து இறங்கி, மற்றொரு விமானத்துக்காக காத்திருப்பார்கள்.
வழக்கமாக இதுபோன்ற பயணிகள் சர்வதேச விமானத்தில் வந்து, உள்நாட்டில் வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டியவர்களாக இருப்பர். இவர்கள் தங்களின் அடுத்த விமானத்துக்காக பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

காத்திருப்பு
இதுபோன்ற சமயங்களில் வசதி படைத்தவர்களாக இருந்தால் அருகில் உள்ள ஹோட்டல்களுக்கு சென்று அங்கு தங்குவார்கள். சற்று பொருளாதார நெருக்கடியில் இருப்பவர்கள் விமான நிலையத்திலேயே மணிக்கணக்கில் காத்திருப்பர். இதில் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகளை வைத்திருப்பவர்களின் நிலைமை இன்னும் பரிதாபமாக இருக்கும்.

கேப்சூல் அறைகள்
பயணிகளின் இந்த நிலைமையை புரிந்துகொண்ட அதிகாரிகள், சென்னை உள்நாட்டு விமான முனையத்தில் சிறிய ஓய்வு அறைகளை அமைத்துள்ளனர். இவை 'கேப்சூல்' அறைகள் என அழைக்கப்படுகின்றன. இதில் ஒரு அறையில் பெரியவர் ஒருவரும், 12 வயதுக்கு கீழே உள்ள குழந்தை ஒன்றும் தங்கிக் கொள்ளலாம்.

வசதிகள் என்ன
அறை சிறியதாக இருந்தாலும் ஒருவர் படுத்து ஓய்வெடுத்துக் கொள்வதற்கும், உறங்குவதற்கும் தேவையான வசதிகள் இதில் உள்ளன. குறிப்பாக, பயணிகளின் உடைமைகளை வைக்கும் இடம், சுத்தமான படுக்கை, செல்போன் - லேப்டாப் சார்ஜ் செய்யும் வசதி, புத்தகம் படிப்பதற்கான சிறிய விளக்கு, ஏசியை கூட்டி - குறைப்பதற்கான வசதி உள்ளிட்டவை உள்ளன.

ஆன்லைனில் அப்ளை
இங்கு தங்குவதற்கு பயணிகள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். ஒரு மணிநேரம் தங்க குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். ஒரு விமானத்தில் வந்து மற்றொரு விமானத்துக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது பரிசோதனை நடவடிக்கைக்காக 4 கேப்சூல் அறைகள் மட்டுமே சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளன. எனினும், இந்த கேப்சூல் அறைகளுக்கு பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பு இருப்பதை காண முடிகிறது.












Click it and Unblock the Notifications