மழை வருமா... வராதா... மக்கள் தவிப்பு.. அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் என கணிப்பு
சென்னை: தமிழகத்தில், அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது என்றும் நீலகிரி மற்றும் அதன் சுற்று வட்டார மலை பகுதிகளில் உறை பனி நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னையில், அதிகபட்சமாக வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியசாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் கூறியுள்ளது.

தூறல் மழை
முன்னதாக, வங்க கடலை ஒட்டிய, இந்திய பெருங்கடல் பகுதியில், இலங்கைக்கு தென் கிழக்கே ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி பகுதியால், கடந்த வாரம் தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளில் மட்டும் தூறிவிட்டு போய்விட்டது. விவசாயம் செய்ய தண்ணீர் இல்லை என்ற நிலையில், தற்போது குடிக்க தண்ணீர் இல்லை என்ற அபாய கட்டம் நிலவுவதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தண்ணீர் தட்டுப்பாடு
இதற்கிடையே, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் போதிய மழையில்லாமல் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் உப்புநீரை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கிராமங்களில் தண்ணீர் கிடைக்காமல், கண்மாய், கிணற்று நீரை குடிக்கின்றனர். இதனால், குடிநீரை ரூ.12க்கு விலைக்கு வாங்குவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

தாமிரபரணி குடிநீர்
தற்போது மழை இல்லாததால் நிலத்தடிநீர் குறைந்துவிட்டது. உப்புத் தண்ணீருக்கு கூட வழியில்லை. தாமிரபரணி குடிநீர் பற்றாக்குறையாக வருகிறது. எனவே, தாமிரபரணி குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

முதலமைச்சர் ஆலோசனை
எதிர் வரும் மாதங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கடந்த வாரம் ஆலோசனை நடத்தினார். இதில், விவசாயத்துக்கான தண்ணீர் தேவை, வனப் பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைத்து, வன உயிரினங்களை பாதுகாத்தல் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாதவாறு நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications