பாம்புக்கு பாயா போட்டாலும் பணியாது! காயம்பட்ட நாகராஜாவுக்கு சிகிச்சை.. அப்பறம் நடந்தது தான் ட்விஸ்ட்
சென்னை: பாம்புக்கு பால் வார்த்தாலும் விஷத்தைத் தான் கக்கும் என்பது நீண்ட நாட்களாக சொல்லப்படும் ஒரு புகழ் பெற்ற வசனம். உண்மையில் அப்படி ஒரு சம்பவம் தான் நடந்திருக்கிறது. காயம்பட்ட பாம்புக்கு சிகிச்சை அளித்தவர் அதே பாம்பால் கடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இந்த உலகில் வசிக்கும் ஆயிரக்கணக்கான உயிரினங்களில் பாம்பு ஒன்று. ஊர்வன இனத்தைச் சேர்ந்த பாம்புகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் தன்மை கொண்டவை. பொதுவாக மனிதர்களிடம் இருந்து விலகி இருக்கவே பாம்புகள் விரும்பும். அதே நேரத்தில் மழைக்காலங்களில் கதகதப்பு தேடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வரும்.
பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள், விஷமுள்ள பாம்புகளாக இருந்தாலும், விஷமில்லா பாம்புகளாக இருந்தாலும் அவற்றை அடித்துக் கொன்று விடுவது மக்களின் வழக்கம். தற்போது ஓரளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் குடியிருப்பு பகுதிகளுக்குள் பாம்புகள் புகுந்தால் கூட தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து அந்த பாம்புகளை பிடித்து பாதுகாப்பாக வனப்பகுதிகளில் விடப்படுகிறது.

மேலும் பாம்புகளை பிடிப்பதற்கென்று ஏராளமான தன்னார்வலர்களும் இருக்கின்றனர். குடியிருப்புகளுக்குள் புகுந்த பாம்புகளை கவனமாக கையாண்டு அவற்றை பிடித்து வனப்பகுதிக்குள் விட்டு வருகின்றனர். சில நேரங்களில் இது போன்ற காப்பாற்றப்படும் பாம்புகள் கடித்து பாம்பு பிடி வீரர்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் நடைபெறுவது வழக்கம்தான். இதற்கு முன்னர் இதேபோல ஏராளமான சம்பவங்கள் நடந்திருக்கிறது. அப்படி ஒரு வீடியோ தான் சமூக வலைதளங்களில் தற்போது பகிரப்பட்டு வருகிறது.
பாத்திரமறிந்து பிச்சையிடு.😳 pic.twitter.com/1ibS6Itgi9
— சேட்டை🐯 (@Settai_R) June 5, 2025
நாகப்பாம்பு ஒன்றுக்கு கடுமையாக காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனை பார்த்த ஒருவர் அந்த பாம்பை லாவகமாக பிடித்து அதற்கு முதல் உதவி சிகிச்சை செய்து கட்டு போடுகிறார். அந்த பாம்பை விட முயற்சித்த போது அவரது கையில் அந்த பாம்பு பலமாக கடித்து விட்டது. இதனால் அவர் மயக்கம் அடைந்த நிலையில் உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
பாம்புக்கு என்னதான் பால் வார்த்தாலும் அது தனது வேலையை காட்டிவிடும் எனவும், பாம்புக்கு பாயாவும் பணியாரமும் கொடுத்தாலும் பணியாது என்ற வடிவேல் வசனத்தோடு இந்த வீடியோ பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் இது எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்ற தகவல் இல்லை.
இது ஒரு புறம் இருக்க பாம்பு பிடிக்கும் போது மிக கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர் தீயணைப்புத் தொடங்கினர். பொதுவாக பாம்புகள் அச்சத்தில் மக்களிடமிருந்து விலகி இருக்கவே நினைக்கும். ஒருவேளை மாட்டிக்கொண்டால் மக்களை அச்சுறுத்துவதற்காக மட்டுமே படம் எடுக்கும். முடிந்தவரை கடிக்க முயற்சிக்காது. எதிர்பாராத விதமாக பாம்புகளை மிதித்து விட்டால் கூட அப்போதும் தப்பிக்க தான் நினைக்கும்.
தனக்கு ஆபத்து வருகிறது என்ற போது தான் மனிதர்களை தாக்கும். தற்போது சமூக வலைதளங்களில் ரீல்ஸ்க்காக சிலர் பாம்புகளை பிடித்து விளையாடி வருகின்றனர். உண்மையில் அப்படி செய்யவே கூடாது. பாம்புகளை பார்த்தால் எது விஷமுள்ள பாம்பு எது விஷம் இல்லாத பாம்பு என தெரியாது. எனவே பாம்புகளிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. ஒருவேளை பாம்புகளை நேரில் பார்க்க நேர்ந்தால் உடனடியாக தீயணைப்புத் துறைகளுக்கு தான் தகவல் தெரிவிக்க வேண்டும். தாங்களாகவே பாம்புகளை பிடிக்க வேண்டும் என நினைக்க கூடாது என அறிவுறுத்துகின்றனர்.












Click it and Unblock the Notifications