அப்போ நீங்க கேள்வி கேட்கலையோ? சட்டென ஓ பன்னீர்செல்வத்தை பார்த்து கேட்ட அப்பாவு.. என்ன நடந்தது?
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் இன்று புகழ்ந்து பேசிய ஓ பன்னீர்செல்வத்தை சபாநாயகர் அப்பாவு அவையில் கிண்டல் செய்தார்.
இன்று தமிழ்நாடு சட்டசபை காரசாரமாக சென்றது. சட்டசபையில் துணை கேள்விக்கு அமைச்சர்கள் சார்பாக பதில் அளிக்கப்பட்டது. சபாநாயகர் ஒவ்வொரு எம்எல்ஏக்களாக எழுந்து கேள்வி கேட்க அனுமதித்தார். அப்போது சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது துணைக் கேள்விக்கு அனுமதி வழங்கக்கோரி உறுப்பினர் வேல்முருகன் எழுந்து பேச வாய்ப்பு மறுத்தபோதும், அவர் தொடர்ந்து பேசிய நிலையில், "இது போன்று அவையில் பேசக்கூடாது, பெரிய சத்தம் போடக்கூடாது" என வேல்முருகனுக்கு சபாநாயகர் அப்பாவு எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், அமைச்சர் பேசும் முன் நான் ஒரு விஷயத்தை சொல்கிறேன். உறுப்பினர் வேல்முருகன் இதற்கு முன் அவையில் பேசி உள்ளார். கடந்த 24, 28, 30, 31ம் தேதி ஆகிய நான்கு நாட்களில் பேசி இருக்கிறார். அப்போதெல்லாம் அவர் துணை கேள்வி கேட்க நான் அனுமதி கொடுத்து இருக்கிறேன்.
துணை கேள்வி கேட்பது மட்டுமின்றி அவர் முன் வரிசையில் இருக்கிறார் என்பதால் பல முக்கியமான விஷயங்களில் அவரை பேச அனுமதி அளித்து இருக்கிறேன். அதோடு அவர் பேச பல முறை நீண்ட நேரம் அனுமதித்து உள்ளேன். தினம் தினம் துணை கேள்வி கொடுக்க வாய்ப்பு இல்லை. பலர் இங்கே சில கேள்விகளை மட்டுமே கேட்டுள்ளனர். சிலர் கேள்விகளையே கேட்கவில்லை. நீங்கள் இப்படி கோபம் அடைய கூடாது. மிரட்ட கூடாது, என்று சபாநாயகர் அப்பாவு தனது கோபத்திற்கு விளக்கம் கொடுத்தார்.
இந்த நிலையில் சட்டசபையில் பேசிய ஓ பன்னீர்செல்வம், பேரவைத்தலைவர் இந்த சிறப்பு வாய்ந்த சட்டசபையை நடத்தி வருகிறார். அவர் ஆசிரியர் போல நடந்து கொண்டு இருக்கிறார். இதற்கு முன்பே அவர் ஆசிரியராக இருந்தவர் என்பது தெரியும். அதை இன்று பார்த்தோம். அவர் கனிவான ஆசிரியர் என்பது மட்டுமின்றி கண்டிப்பான ஆசிரியர் என்பதும் தெரிய வந்துள்ளது. அவருக்கு வாழ்த்துக்கள் என்று ஓ பன்னீர்செல்வம் கூறினார்.
இதற்கு பதில் சொன்ன சபாநாயகர் அப்பாவு, அப்போ நீங்க துணை கேள்வி எதையும் கேட்கவில்லை அப்படித்தானே.. என்று கிண்டாலாக சொல்லி கலாய்த்தார்.

தமிழ்நாடு சட்டசபையில் ஓ பன்னீர்செல்வத்தின் இருக்கையை அப்பாவுதான் தீர்மானம் செய்ய வேண்டும். அவர் தற்போது எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையில் அமர்ந்து உள்ளார். இதை எடப்பாடி பழனிசாமி எதிர்த்து வருகிறார். ஓ பன்னீர்செல்வத்திற்கு எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லை. ஆர்பி உதயகுமார்தான் எதிர்க்கட்சி துணை தலைவர். ஆர்பி உதயகுமார்தான் அதிமுகவின் எதிர்க்கட்சி துணை தலைவர். அதனால் அவரைத்தான் அந்த இருக்கையில் அமர வைக்க வேண்டும் என்று எடப்பாடி சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. ஆனால், நான்தான் எதிர்க்கட்சி துணை தலைவர். அதனால் நான்தான் அந்த இடத்தில் தொடர வேண்டும். எடப்பாடியை இன்னும் தேர்தல் ஆணையம் பொதுச்செயலாளராக அங்கீகரிக்கவில்லை என்று ஓ பன்னீர்செல்வம் வாதம் வைத்து வருகிறார்.
இந்த நிலையில்தான் இன்று அப்பாவுவை ஓ பன்னீர்செல்வம் அவையிலேயே புகழ்ந்து பேசினார்.












Click it and Unblock the Notifications