பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி போல சாதியின் விளைவை பாடமா சொல்லித்தரணும்.. நாங்குநேரி கோரம் பற்றி பாடகர் அறிவு!
சென்னை: "தண்டனைகளும், கண்டனங்களும் மட்டுமே வெறுப்பு மனநிலையை மாற்றாது. சாதியற்ற வருங்காலத்தை உருவாக்க, physics, chemistry, maths போல, வகுப்பறைகளில் சாதியத்தின் சமூக விளைவை பாடமாக சொல்லிக் கொடுக்கவேண்டும்" என நாங்குநேரி சம்பவம் குறித்து பாடகர் தெருக்குரல் அறிவு தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பிளஸ் 2 படிக்கும் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கை ஆகியோர், சக மாணவர்களால் மிகக் கொடூரமான முறையில் அரிவாளால் வீடு புகுந்து வெட்டப்பட்ட சம்பவம் தமிழக மக்கள் அனைவரையும் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பள்ளி மாணவர்களின் சாதி வெறியால் நிகழ்ந்த இந்தக் கொடூரம் குறித்து அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தங்கள் கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக பாடகர் 'தெருக்குரல்' அறிவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சாதியற்ற வருங்காலத்தை உருவாக்க, physics, chemistry, maths எல்லாத்தையும் போல, வகுப்பறைகளில் சாதியத்தின் சமூக விளைவை பாடமாக சொல்லிக் கொடுங்க! Anti-Caste மனநிலை மாணவப் பருவத்திலேயே எல்லாருக்கும் கற்பிக்கப்படணும். இடஒதுக்கீடு ஒரு இலவசம், ஆண்ட பெருமைகள், சாதி அடையாள கயிறுகள், குறியீடுகள் போன்ற தவறான புரிதல்களை அரும்பிலேயே கிள்ளி எறிவதுதான் சமகால கல்வியின் பிரதான நோக்கமாக இருக்கணும்.

சாதிய வன்கொடுமைகளில் யாருடைய ரத்தம் காலம் காலமாக சிந்திக் கிடக்கிறது என விவாதிக்காமல், எல்லா ரத்தமும் சிவப்பு என்றும், சாதியை ஓர் ஆபத்தில்லாத பண்பாட்டு வடிவம் என்றும், இருந்தும் இல்லாத ஒன்று என கடந்து போவதும் மேலும் ஆபத்தை வருவிக்கும். சக மாணவன் படிப்பதையும் சுயமுன்னேற்றம் அடைவதையும் கூட ஏற்க முடியாத மனநோயின் வேரை கண்டறிந்து வீழ்த்தாமல், தண்டனைகளும் கண்டனங்களும் மட்டும் பட்டியலினத்தவர் மீதான வெறுப்பு மனநிலையை மாற்றாது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications