அய்யா எனக்கும் உதவி பண்ணுங்க அய்யா’.. அமைச்சர் துரைமுருகனின் கமெண்ட் வைரல்
சென்னை: திமுகவின் பொதுச் செயலாளரும், நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகனின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் இருந்து யூடியூபர் ஹர்ஷா சாயிடம் உதவிக் கேட்டுள்ளது போன்ற கருத்து பதிவு செய்யப்பட்டுள்ள கருத்து வைரலாகியிருக்கிறது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் பல்வேறு விதமான ரிப்ளைகளை செய்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயநகரத்தைச் சேர்ந்தவர் ஹர்ஷா சாய். கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு யூடியூப் சேனலைத் தொடங்கி தனது உடற்பயிற்சி தொடர்பான வீடியோக்களைப் பதிவிட்டு வந்தார். இந்த வீடியோக்கள் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து, 5 ரூபாய் நாணயங்களைக் கொடுத்து 4 லட்சம் மதிப்பிலான கார் வாங்கும் வீடியோ, பேய் வீட்டில் தங்குவது உள்ளிட்ட இன்டிரெஸ்டிங்கான பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.

இதைத்தொடர்ந்து, இவரது சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. யூடியூப் மூலம் கிடைக்கும் வருமானத்தை தனக்கென மட்டும் வைத்துக் கொள்ளாமல் ஏழை மக்களுக்கு உதவி செய்யத் தொடங்கினார். இதன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார். ஏழ்மை நிலையில் உள்ள சிறுவனுக்கு மிதிவண்டி வாங்கிக் கொடுப்பது, வீடு கட்டி கொடுப்பது என பல உதவிகளை செய்து வந்தார்.
1 லட்சம் ஏழை மக்களுக்கு 5 ஸ்டார் ஹோட்டலில் உணவு வாங்கி கொடுத்து மிகவும் பிரபலமடைந்தார். ஏழைகளுக்கு உதவி செய்வதைப்போல வெளியாகும் வீடியோக்களால் சமூக வலைதளங்களில் இவர் மிகவும் பிரபலமாக அறியப்பட்டு வருகிறார். தெலுங்கு, தமிழ், இந்தி என மூன்று மொழிகளிலும் யூடியூப் சேனல்களை நடத்தி வருகிறார். மில்லியன் கணக்கான சப்ஸ்கிரைபர்கள் இவரைப் பின்தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், காதும் கங்கன்னாடோரா என்ற ஏழை விவசாயிக்கு ஹர்ஷா சாய் ஒரு ஏக்கர் விளைநிலம் வாங்கி இலவசமாக கொடுக்கும் வீடியோ கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அந்த வீடியோவில், ஹர்ஷா சாய்க்கு விவசாயியின் குடும்பத்தினர் சேர்ந்து ஆரத்தி எடுத்து வரவேற்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த வீடியோ காட்சி யூடியூப் ஃபேன்ஸ் பேஜ் என்ற ஃபேஸ்புக் பக்கத்திலும் நேற்று பகிரப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வீடியோவின் கமெண்ட் பகுதியில் தமிழக நீர்வளத் துறை அமைச்சரும், தி.மு.க.வின் பொதுச் செயலாளருமான துரைமுருகனின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்க ஐடியில் இருந்தே அய்யா எனக்கும் உதவி பண்ணுங்க அய்யா' என்று பதிவிடப்பட்டுள்ளது. இந்தப் பக்கத்தில் அமைச்சர் துரைமுருகனின் புகைப்படமும் உள்ளது.
இந்நிலையில், நெட்டிசன்கள் பலரும் இந்த கமெண்ட் பதிவுக்கு நகைச்சுவையான ரிப்ளைகளை செய்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, இந்தப் பதிவையே இன்று காலையில்தான் கவனித்து நீக்கியுள்ளனர் துரைமுருகன் தரப்பினர். இதுகுறித்து அமைச்சர் துரைமுருகன் தரப்பினர் கூறுகையில், அவரது சமூக வலைதளப் பக்கங்களைக் கவனிக்கும் அட்மின் தரப்பில் இருந்து இதுபோன்ற கமென்ட் பதிவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளனர். இந்த கமெண்ட் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications