‛இது கவலைக்குரியது’.. ராணுவ வீரர் பிரபு கொலையால் கொதித்த ஆளுநர் மாளிகை.. மத்திய உள்துறைக்கு ‛டேக்’
பாஜக மாநில தலைவர், முன்னாள் ராணுவ வீரர்களுடன் ஆளுநர் ஆர்என் ரவியை சந்தித்து புகார் அளித்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் சில விஷயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை எனவும், கிருஷ்ணகிரி ராணுவ வீரர் பிரபு குறித்தும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் இன்று ஆளுநர் ஆர்என் ரவியை சந்தித்து புகார் அளித்தனர். இந்த புகாரை தொடர்ந்து, ‛இது உண்மையில் கவலைக்குரியது' என கருத்து தெரிவித்துள்ள ஆளுநர் மாளிகை மத்திய உள்துறை அமைச்சகத்தும், பிரதமர் மோடியின் அலுவலகத்துக்கு ‛டேக்' செய்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன்(வயது 30). இவரது தம்பி பிரபு(29) இவர்கள் 2 பேரும் ராணுவத்தில் பணியாற்றினர். அதே பகுதியை சேர்ந்தவர் ர் சின்னசாமி (50). இவர் நாகோஜனஹள்ளி பேரூராட்சி 1வது வார்டில் திமுக கவுன்சிலர் ஆவார்.
இந்நிலையில் தான் பொது தண்ணீர் தொட்டி அருகே துணி துவைத்த விவகாரத்தில் கவுன்சிலர் சின்னசாமிக்கும், பிரபாகரன் குடும்பத்துக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. சின்னசாமி தனது குடும்பத்தினருடன் சென்று ராணுவ வீரர்களான பிரபாகரன், பிரபு மற்றும் குடும்பத்தினரை தாக்கியதாக கூறப்படுகிறது.

ராணுவ வீரர் கொலை
இதில் பிரபாகரன், பிரபு உள்ளிட்டவர்கள் படுகாயமைடந்தனர். மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ராணுவ வீரரான பிரபு கடந்த 14ம் தேதி உயிரிழந்தார். சம்பவம் குறித்த புகாரில் நாகரசம்பட்டி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். திமுக கவுன்சிலர் சின்னசாமி, குருசூர்யமூர்த்தி, குணாநிதி, ராஜபாண்டி, மணிகண்டன், மாதையன், புலிபாண்டி, வேடியப்பன், காளியப்பன், உள்ளிட்டர்வகளை கைது செய்தனர்.

பாஜக உண்ணாவிரதம்
இதற்கு பாஜக, அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் ராணுவ வீரருக்கே பாதுகாப்பு இல்லை என அவர்கள் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்நிலையில் தான் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை எனவும் ராணுவ வீரர் பிரபு கொலையை கண்டித்தும் சென்னை சேப்பாக்கத்தில் பாஜகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில தலைவர் அண்ணாமலை உள்பட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

மாஜி ராணுவத்தினர் புகார்
இதையடுத்து இரவில் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் அண்ணாமலை ஆளுநர் ஆர்என் ரவியை சந்தித்தார். அவருடன் முன்னாள் ராணுவத்தினர் இருந்தனர். மாநிலத்தில் நிலவும் சட்டம் -ஒழுங்கு பிரச்சனை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ராணுவ வீரர் பிரபு கொலை தொடர்பாக அவர்கள் புகார் அளித்தனர். இந்நிலையில் தான் புகார் குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகை விளக்கம்
இதுபற்றி அந்த ட்விட்டர் பதிவில், ‛‛ஆளுநரை முன்னாள் ராணுவ வீரர்கள் சிலர் சந்தித்து, திமுக கவுன்சிலர் தலைமையிலான ஆயுத கும்பலால் ராணுவ வீரர் எம் பிரபு கொடூரமாக கொல்லப்பட்டது குறித்தும், மாநில சட்ட அமலாக்க அமைப்பின் மெத்தன நடவடிக்கை குறித்தும் கூட்டு வேதனையை பகிர்ந்து கொண்டனர். உண்மையில், இது கவலைக்குரிய விஷயம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ட்விட்டர் பதிவை பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அலுவலகம் ஆகியவற்றுக்கு ‛டேக்' செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications