அன்று கட்டைவிரலை காணிக்கையாக கேட்டது போல தான்! இன்று புதிய கல்வி கொள்கை! தியாகராஜன் குமாரராஜா பேச்சு
சென்னை: கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, படிப்பதை மட்டும் விடக்கூடாது என்பதை வலியுறுத்தினார். மேலும், கடந்த காலங்களில் எப்படி அனைவரும் படிக்கக்கூடாது என்பதற்காகக் கட்டை விரலைக் காணிக்கையாகக் கேட்டார்களோ.. அதுபோல இப்போது புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்பட்ட கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு கல்வியின் முக்கியத்துவம் குறித்துப் பேசினர். அதன்படி இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, படிப்பதை மட்டும் விடக்கூடாது என்பதை வலியுறுத்தினார்.

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா
இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா மேலும் பேசுகையில், "கல்வியைப் பற்றி 2000 ஆண்டுகளுக்கு முன்பே பாண்டிய மன்னன் ஒருவர் ஒரு பாடலை எழுதி இருக்கிறார். அந்தப் பாடலில் கடைசி 4 வரிகள் ரொம்பவே முக்கியமானது.
'வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும், கீழ்ப்பால் ஒருவன் கற்பின், மேற்பால் ஒருவனும் அவன் கண் படுமே' என்று அந்தப் பாடலில் கூறப்பட்டு இருக்கும்.
அதாவது கல்விக்கு இரு குணங்கள் இருக்கிறது. அதில் ஒரு குணம் இவர் சொல்வது. கல்வி என்பது கீழே இருப்பவன் கற்ற பிறகு, மேலே இருப்பவனையும் அவனோடு சமமாகச் சேர வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும்.
படிப்பு குறையாது
முதலில் நாம் எதற்காகப் படிக்கிறோம்.. படித்து நல்ல வேலைக்குப் போய்.. குடும்பத்தை, அப்பா அப்பாவை, குழந்தைகளைக் காப்பாற்றுகிறோம். கல்வியின் மூலம் இதை அடைவதற்குப் பதிலாக நான் ஒரு கோடி ரூபாயை கொடுக்கிறேன் என்றால் அவர்கள் சந்தோஷமாக வாழ்ந்துவிட முடியும். ஆனால், என்னிடம் அந்த ஒரு கோடி ரூபாய் இருக்காது.
ஆனால், கல்வியை கற்று, அதை வைத்து பணம் சம்பாதிக்கும்போது, அது என்னையும் அறிவாளியாக வைத்திருக்கும். அதை வாங்குவோரையும் அறிவாளியாக வைத்திருக்கும். என்னிடம் இருக்கும் கல்வி அவரிடம் போகும். அவரை எனக்குச் சமமான நபராகவும் மாற்றும். இதன் காரணமாகவே கல்வியை கற்கக்கூடாது என்று பழங்காலத்தில் இருந்து நம்மை தடுத்துக் கொண்டே வருகிறார்கள். கல்வியை கற்றுக் கொண்டு வந்த நாம் இடையில் ஏன் அதை இழந்தோம் என்பதை யோசிக்க வேண்டும்.
திராவிட கருத்தியல் vs ஆரிய கருத்தியல்
இங்குக் கல்வியைச் சார்ந்து இரண்டு விதமான கருத்தியல்கள் உள்ளன. ஒன்று திராவிடக் கருத்தியல். எல்லாரும் படிக்க வேண்டும். எல்லாரும் அறிவாளியாக இருக்க வேண்டும் என்பதைச் சொல்வது திராவிடக் கருத்தியல். நாம் செய்யும் பல புண்ணியங்களைக் காட்டிலும் ஏழை ஒருவருக்குக் கல்வியை கற்றுக் கொடுப்பதே பெரிய புண்ணியம் என்றே பாரதியார் கூட கூறுகிறார். அப்படியொரு புண்ணியமான செயல் தான் கல்வியை கற்றுக் கொடுப்பது.
ஆனால் ஆரியக் கருத்தியல் என்ன சொல்கிறது என்றால்.. கல்வி கற்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ஒருவன், ஆசிரியரிடம் போய் கேட்டபோது, நீ எந்த ஆளுங்க என்று கேட்டு அவனுக்குச் சொல்லி மறுத்து என்று அவனை அனுப்பி விட்டார். அவன் தானாக வில்வித்தை கற்றுக் கொண்டு ஆசிரியரிடம் நின்றபோதும் அவருடைய கட்டைவிரலை வாங்கிக் கொண்டார்.
கட்டை விரல்
கர்ணனும் இதுபோலத் தான் சென்று கற்கக் கேட்டார். கர்ணனுக்கும் சொல்லித் தர மறுத்துவிட்டார். பிறகு கர்ணன் கிருபாச்சாரியாரிடம் சென்று மேட்டுக்குடி எனப் பொய் சொல்லி தொழில் கற்றார். ஆனால், கர்ணன் மேட்டுக்குடி இல்லை என்பது தெரிந்ததும், கிருபாச்சாரியாரும் நீ கற்றுக் கொண்டவை எல்லாம் ஒருநாள் போய்விடும் என்று சாபம் விடுகிறார்.
இப்படி துரோணாச்சாரியர், கிருபாச்சாரியார் ஆரம்பித்த ராஜகோபாலாச்சாரி வரை நாம் படிப்பதைத் தடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்தக் கொள்கைக்கு எதிராக எதிராக.. சமத்துவம் இருக்கக் கூடாது என்று சொல்லும் இடத்தில் சமத்துவமும் சமூக நீதியும் கொண்டு வர முயலும் ஒரு கட்சி ஆட்சியில் இருப்பதால், அவர்கள் அனைவரையும் படிக்க வைக்க எல்லாத் திட்டங்களையும் போடுகின்றனர்.
இப்போது புதிய கல்வி கொள்கை
முன்பு நாம் படிப்பதைத் தடுக்கக் கட்டைவிரலைக் கேட்டது போல, கர்ணனுக்கு அம்னீசியா கொடுத்தது போல இப்போது புதிய கல்விக் கொள்கையை வந்துள்ளனர். அதை ஏற்க மறுத்தால் நமக்கு நியாயமாக வரவேண்டிய கல்வி நிதியைத் தர மறுக்கிறார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications