100 கோடி முதலீட்டை அமைச்சர் கீர்த்தனா கொண்டு வந்திருக்கணும்.! ஆட்டம் போட்டால் எப்படி: ஜேம்ஸ் வசந்தன்
சென்னை: பிரபல இசையமைப்பாளர் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் சூழல் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் 40 நாள் ஆட்சி நிர்வாகம் குறித்து பல்வேறு அதிரடி விமர்சனங்களை முன்வைத்துள்ளார். குறிப்பாக, "ஊழலற்ற தூய சக்தி" என்று தங்களை அறிவித்துக்கொண்டு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த புதிய அரசுக்கு, ஆரம்பத்திலேயே மிகப்பெரிய அடியாக விழுந்திருக்கும் சென்னை சிஎம்டிஏ (CMDA) துறை சார்ந்த 100 கோடி ரூபாய் ஊழல் புகாரை ஜேம்ஸ் வசந்தன் ஆதாரப்பூர்வமாக கூறியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
எம்ஜிஆர் டிவி செய்தி சேனலில் அதிரடியான சிறப்புப் பேட்டி ஒன்றை அளித்துள்ளார் பிரபல இசையமைப்பாளரும் ஊடகவியலாளருமான ஜேம்ஸ் வசந்தன்..

ஜேம்ஸ் வசந்தன் பேட்டி
அதில், "புதிய அரசு பொறுப்பேற்ற இந்த 40 நாட்களுக்குள், மிகக் குறிப்பாக வெறும் 3 நாட்களில் அவசர அவசரமாக 110 கட்டிட திட்ட அனுமதிகள் தாராளமாக அள்ளி வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த அசுர வேக அனுமதிகளுக்குப் பின்னணியில் சுமார் 100 கோடி ரூபாய் வரை லஞ்சப் பணம் கைமாறியிருப்பதாக குற்றச்சாட்டுகள் வெளியாகின்றன..
ஆனால், இந்த குற்றச்சாட்டு குறித்து, துறை சார்ந்து யாராவது இதுவரை பதில் சொல்லி உள்ளார்களா? அப்படி ஊழல் நடக்கவேயில்லை என்று யாருமே சொல்லவில்லையே. அப்படி ஒரு சம்பவமே அங்கு நடக்கவில்லை என்றோ, அல்லது இந்தத் தகவல் முற்றிலும் தவறு என்றோ மறுப்பு தெரிவிக்க அதிகாரப்பூர்வமாக யாரும் முன்வராதது ஏன்?
தவெக ஆட்சி - ஊழல் குற்றச்சாட்டு
உயர் அதிகாரிகள் யாரும் இதற்குப் பொறுப்பேற்காததற்கு காரணம், புதிய ஆட்சியாளர்களின் கடுமையான அழுத்தமே என்று அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். பத்திரப் பதிவுத் துறையிலும், சிஎம்டிஏ-விலும் அடிமட்ட அளவில் புரோக்கர்கள் மூலமாக 3 லெவல்களில் காசு வாங்கப்பட்டு, ஆன்லைன் முறையையும் தாண்டி ஊழல் தடையின்றி நடப்பதாகப் பொதுமக்கள் பலரும் தங்களின் குமுறல்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
இனிமேல் எங்கும் ஊழலே நடக்காது, யாரும் காசு கொடுக்கத் தேவையில்லை" என்று தேர்தல் மேடைகளில் முழங்கிவிட்டு, இப்போது அதிகாரப்பூர்வமான துறைகளிலேயே இப்படி நூறு கோடி ரூபாய் அளவிற்கு லஞ்சம் விளையாடியிருப்பது புதிய ஆட்சியின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கையில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாரைக் கூட வைத்துக்கொண்டு இவர்கள் ஊழலை ஒழிக்கப்போவதாக சொல்கிறார்கள்? செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா மற்றும் லாட்டரி அதிபர் குடும்பத்தைச் சேர்ந்த லீமா ரோஸ் போன்றவர்கள்தான் ஊழலையே ஒழித்துவிட்டதாக வெளியில் பேசிக்கொள்கிறார்கள்
அமைச்சர் கீர்த்தனா ரீல்ஸ்
அதேபோல, நாம் பொதுவெளியில் எவ்வளவு கண்ணியமாக நடந்து கொள்கிறோமோ, அதற்குரிய மதிப்பு தான் மற்றவர்களிடம் இருந்து நமக்குக் கிடைக்கும். உதாரணத்துக்கு அமைச்சர் கீர்த்தனா ஆரம்பத்திலேயே சமூக வலைத்தளங்களில் செல்பி எடுத்துக்கொண்டு குத்தாட்டம் போடுவதைத் தவிர்த்திருக்க வேண்டும், தொடக்கத்திலேயே இதை செய்ய வேண்டிய அவசியம் அமைச்சருக்கு இல்லை..
முதலில் தனது துறை சார்ந்த பணிகளில் முதலில் சாதித்துக் காட்டியிருக்க வேண்டும். வெளிநாட்டு முதலீடுகளைப் பல நூறு கோடிகள் ஈர்த்து, "இந்த பன்னாட்டு நிறுவனம் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறது, இந்த நிறுவனம் மூலமாக இத்தனை பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது" என்று ஒரு வருட ஆட்சியில் , அதன் பிறகு அவர் ரீல்ஸ் செய்திருந்தால் மக்கள் அதைத் தவறாகப் பார்த்திருக்க மாட்டார்கள்.
100 கோடி முதலீடு எங்கே
அதை விட்டுவிட்டு வெறும் "ஆட்டத்தை" மட்டுமே தொடர்ந்து போட்டுக்கொண்டு இருந்தால் மக்கள் மத்தியில் விமர்சனங்கள் வராமல் என்ன செய்யும்? அமைச்சர் என்ற உயர் பொறுப்பிற்கு என்று ஒரு குறைந்தபட்ச நாகரிகமும், கண்ணியமும் இருக்கிறது, அதை அவர்கள் கட்டாயம் மெயின்டைன் செய்ய வேண்டும்.
புதிய அரசு பொறுப்பேற்ற உடனேயே, மக்கள் பெரும்பாலானவர்கள் இதை ஒரு ரீல்ஸ் ஆட்சி என்று உணர்ந்து விட்டார்கள்.. இந்த சூழலில் ஒரு பொறுப்பான அமைச்சரே சேர்ந்து ஆட்டம் போட்டு ரீல்ஸ் வெளியிட்டால் கருத்துகளும் விமர்சனங்களும் வராமல் எப்படித் தவிர்க்க முடியும்?
நீங்கள் என்ன மாதிரியான டிரஸ் அணிகிறீர்கள் என்பது இங்கு பிரச்சனையே இல்லை, ஆனால் பொதுவெளியில் உங்களை நீங்கள் எப்படி நடத்திக்கொள்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.. நாம் பப்ளிக்கில் எப்படி நடந்துகொள்கிறோமோ, அதற்கு ஏற்றாற்போலத்தான் வெளியில் இருந்து எதிர்வினைகளும் வரும்" என்றெல்லாம் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications