நம் நாட்டில் இந்து என்று சொன்னாலே சிலருக்கு அலர்ஜி.. வெங்கய்ய நாயுடு தாக்கு
சென்னை: நம் நாட்டில் இந்து என்று சொன்னாலே சிலருக்கு அலர்ஜியாக இருப்பதாகவும், இது சரியல்ல என்றும் குடியரசுத் துணை தலைவர் வெங்கய்ய நாயுடு பேசினார்.
இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்த வெங்கய்ய நாயுடு நேற்று தஞ்சை மாவட்டம் திருவையாறில் தியாகராஜர் ஆராதனையை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், "மற்ற நாடுகள் கடவுள் ஒருவரே என்கின்றன. ஆனால் நம் பண்பாட்டில் எவ்வளவு கடவுள்களும் இருக்கலாம். கோடிக்கணக்கில் கடவுள்கள் இருந்தாலும் இன்னும் புதிதாக கடவுள்கள் வரலாம். இதில் தவறு ஒன்றும் இல்லை.
இதுதான் நம் பண்பாட்டின் சிறப்பு, நம் நாடு உயரிய கலாச்சாரத்தை கொண்டது. இதுவே நம் நாடு உலக அளவில் புகழ் பெற்று இருப்பதற்கு காரணம்" என்றார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் நடந்த விழாவில் வெங்கய்ய நாயுடு பேசுகையில், "நம் நாட்டில் ஹிந்து என்று சொன்னாலே சிலருக்கு அலர்ஜி; அது சரியானது அல்ல. யாரையும் சாதி ரீதியாக வேறுபடுத்தி பார்த்தல் கூடாது. பிற மதத்தை சேர்ந்தவர்களை நாம் மதிக்க வேண்டும். யோகா பயிற்சி என்பது நமது 'பாடி'க்குத்தான். மோடிக்காக அல்ல.
பீட்ஸா, பர்கர் போன்ற உணவு பொருட்கள் மற்ற நாடுகளின் தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்றதாக இருக்கும். ஆனால் நம்முடைய தட்ப வெப்ப சூழலுக்கு ஏற்றதல்ல. மொழித் திணிப்பும், தாய்மொழி எதிர்ப்பும் எங்கும் இருக்கக் கூடாது. நமது தாய்மொழியை நாம் மறக்கவே கூடாது" இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications