சீட்டு வாங்குனா மட்டும் போதாது.. சரியான வேட்பாளரை தேர்ந்தெடுக்கனும்.. புலம்பும் காங். தொண்டர்கள்
சென்னை: காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளின் வாரிசுகளுக்கும் உறவினர்களுக்கும் மட்டுமே அதிகம் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதால், அக்கட்சி தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இந்த முறை தமிழகத்தில் ஒரே கட்டமாகச் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து, மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
அதில் அதிமுக கூட்டணியில் இணைந்து பாஜக களமிறங்குகிறது. அதேபோல மற்றொரு தேசிய கட்சியான காங்கிரஸ் திமுக தலைமையிலான கூட்டணியில் இந்த முறை தேர்தலை எதிர்கொள்கிறது.

கடந்த கால கூட்டணி
கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக அதிகளவில் இடங்களை ஒதுக்கியிருந்தது. கடந்த 2011ஆம் காங்கிரஸ் கட்சிக்கு 62 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதேபோல 2016ஆம் ஆண்டு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால், அந்த 41இல் காங்கிரஸ் கட்சியால் ஒன்பது இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களை ஒதுக்கியதாலேயே திமுக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்ததாகப் பலரும் குற்றஞ்சாட்டினர்.

திமுக கறார்
இதனால் இந்த முறை திமுக காங்கிரசிடம் மட்டுமல்ல அனைத்து கூட்டணிக் கட்சிகளிடமும் மிகவும் கறாராகவே நடந்துகொண்டது. மதிமுக, விசிக, இடதுசாரிகள் என முக்கிய கூட்டணிக் கட்சிகளுக்கு வெறும் ஆறு இடங்களை மட்டுமே திமுக ஒதுக்கியது. காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை நீண்ட நாளாக இழுபறியிலேயே இருந்தது. திமுக மிகவும் குறைவான தொகுதிகளையே ஒதுக்குவதாகக் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி நிர்வாகிகளிடம் கண்ணீர் வடித்தார்.

25 சீட்டுகள் மட்டும்
இருப்பினும்கூட, காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்களை மட்டுமே திமுக ஒதுக்கியது. அதேபோல கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஒரு வழியாக தொகுதிப்பங்கீடு இறுதியான பின், வேட்பாளர் தேர்வைக் காங்கிரஸ் தொடங்கியது. அதிலும்கூட சில சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியானது.

குடும்ப அரசியல்
அதைத்தொடர்ந்து நேற்றிரவு காங்கிரஸ் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. விளவங்கோடு, குளச்சர், மயிலாடுதுறை வேளச்சேரி தொகுதிகளைத் தவிர மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளின் வாரிசுகள் மற்றும் உறவினர்களின் பெயர்களே இடம் பெற்றுள்ளது.

நிர்வாகிகளின் மகன்கள்
ஈரோடு கிழக்கு தொகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகன் திருமுகன் ஈவேரா போட்டியிடுகிறார். அதேபோல தற்போது திருச்சி எம்பியாக உள்ள திருநாவுக்கரசர் மகன் ராமச்சந்திரன் அறந்தாங்கியிலும் தற்போது காங்கிரஸ் சட்டசபை தலைவராக உள்ள ராமசாமியின் மகன் ஆர்எம் கருமாணிக்கம் திருவாடனை தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

உறவினர்களுக்கும் சீட்
அதேபோல காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மகன் மோகன் குமாரமங்கலத்திற்கு ஒமலூர் தொகுதிக்கும் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் மாமனார் ரவிசந்திரன் மேலூர் தொகுதிக்கும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல கன்னியாகுமரி தொகுதிக்கு மறைந்த வசந்த குமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிடுகிறார். அதேநேரம் காங்கிரஸ் கொறடா விஜயதாரணி சட்டசபை உறுப்பினராக உள்ள விளவங்கோடு, ஜே ஜி பிரின்ஸ் சட்டசபை உறுப்பினராக உள்ள குளச்சல் தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

கட்சிக்குள்ளேயே அதிருப்தி
முன்னதாக வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு முன்னரே, கட்சியிலிருந்து விலகி, பின் மீண்டும் கட்சியில் இணைந்தவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதாக் கூறி அக்கட்சியின் எம்.பி. விஷ்ணு பிரசாத், சென்னை சத்தியமூர்த்தி பவனில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். அதேபோல, எம்பி ஜோதிமணி கூறுகையில், "தொண்டர்களின் ரத்தத்தைக் குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள் நியாயத்தின் குரலைச் செவிமடுக்கவில்லை. இந்த தலைவர்கள் தொண்டர்களுக்கு மட்டுமல்ல தன்னை நம்பிய தலைவருக்கும் துரோகம் செய்கிறார்கள். பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் சீட் பெற முடியும் என்பது அக்கிரமம்" என்றார்.

தொண்டர்கள் புலம்பல்
இப்படி கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில்தான் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதிலும்கூட பெரும்பாலும் வாரிசுகளுக்கே அதிகம் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால் அக்கட்சியின் தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் பலம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், களச் சூழ்நிலையைப் புரிந்து கொள்ளாமல், மக்கள் செல்வாக்கு இல்லாத வாரிசுகளுக்கு அதிகம் சீட்டுகளை வழங்கினால் அது காங்கிரஸ் கட்சியின் அழிவுப் பாதைக்கே வித்திடும் என்று புலம்புகின்றனர் அக்கட்சியின் தொண்டர்கள்!












Click it and Unblock the Notifications