முதல்வர் ஸ்டாலின் பாதுகாப்பு படை வீரர்களுக்கு இஸ்ரேலில் தயாரான அதிநவீன "X 95" துப்பாக்கி!
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பாதுகாப்பு படை வீரர்களுக்கு எக்ஸ் 95 என்ற அதிநவீன துப்பாக்கிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த துப்பாக்கியை பயன்படுத்துவது குறித்து டெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு படையின் தலைமையகத்தில் வீரர்களுக்கு சிறப்பு பயிற்சியும் தரப்பட்டுள்ளது.

அதிநவீன் துப்பாக்கி
தேசிய பாதுகாப்பு படையின் தலைமையகத்தில் தலைவர்களுக்கான பாதுகாப்பு தொடர்பாக சிறப்பு பயிற்சி பெற்ற 12 வீரர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் ஏற்கனவே உபயோகப்படுத்தி வரும் துப்பாக்கிகளுடன் கூடுதலாக எக்ஸ் 95 என்ற அதிநவீன துப்பாக்கிகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த ரக துப்பாக்கி இஸ்ரேல் நாட்டின் தயாரிப்பு என்பது கூடுதல் தகவலாகும்.

சிறப்பு பயிற்சி
இலக்கை மிக துல்லியமாக தாக்கும் திறனை கொண்ட எக்ஸ் 95 துப்பாக்கியை எல்லோராலும் பயன்படுத்த முடியாது என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இதை இயக்குவதற்கு என்றே சிறப்பு பயிற்சிகள் பெற வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு வழங்கப்பட்டதை போலவே நாடு தழுவிய அளவில் முக்கியத் தலைவர்கள் பலரது பாதுகாப்பிலும் இந்த வகை அதிநவீன துப்பாக்கிகள் இணைக்கப்பட்டுள்ளன.

பிளாக் கேட்ஸ்
கருணாநிதி மற்றும் ஜெயலலிதா காலங்களில் அவர்கள் காரை விட்டு இறங்கும் முன்பாகவே பிளாக் கேட்ஸ் எனப்படும் கருப்பு பூனைப்படை வீரர்கள் அவர்களை சூழ்ந்து நின்று பாதுகாப்பு அளிப்பார்கள் என்பது திரும்பிப் பார்க்கத் தக்கது. இதேபோல் பொது நிகழ்ச்சிகளிலும் தலைவர்களை மக்கள் காண முடியாதபடி சூழ்ந்து நின்று அழைத்துச்செல்வார்கள். ஆனால் அது போன்ற ஒரு நிலை இப்போது இல்லை. மிக சாதாரணமாக எளிய மக்களும் தன்னை சந்திக்கக் கூடிய வகையில், பார்க்கக் கூடிய வகையில் முதல்வர் ஸ்டாலின் பயணம் செய்கிறார்.

காலத்திற்கேற்ற அப்டேட்
இஸ்ரேல் நாட்டின் எக்ஸ் 95 ரக துப்பாக்கியை பொறுத்தவரை உலக அளவில் பல்வேறு தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வீரர்கள் பயன்படுத்தி வரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே முதல்வரின் பாதுகாப்பு படையில் இணைந்துள்ள இந்த துப்பாக்கி காலத்திற்கேற்ற அப்டேட்டாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications