"உசுப்பேத்தாமல் உம்முனு இருக்க முடிவாமே".. விஜய்யின் திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன?
சென்னை: 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கால் ஊன்ற நடிகர் விஜய் நினைத்த நிலையில் தற்போது தான் எடுத்த ஒரு "முக்கிய" முடிவிலிருந்து பின்வாங்கியது ஏன் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் விஜய் நடித்த தலைவா படம் வெளியாவதில் சிக்கல் எழுந்தது. இதற்கு காரணம் டைட்டிலுடன் இருந்த Time to lead என்ற வார்த்தைதான். அதாவது தலைவா தலைமையேற்கும் நேரம் என பொருள்படுவதால் விஜய் கடுமையான பிரச்சினைகளை சந்தித்தார்.
அன்றிலிருந்தே அவர் எடுக்கும் படங்கள் வெளியாகும் போது ஏதாவது ஒரு சிக்கல் வந்து கொண்டே இருந்தது. மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி குறித்து விஜய் பேசிய வசனம் அரசியலில் பெரும் தீப்பொறியை ஏற்படுத்தியது.

இசை வெளியீட்டு விழா
சினிமாவில் மட்டும் இல்லாமல் தனது படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போல் குட்டி ஸ்டோரிகளை அரசியல் உள்அர்த்தம், வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் கூறுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அவரது அரசியல் வருகையை எதிர்பார்த்து வரும் ரசிகர்களுக்கு இந்த இசை வெளியீட்டு விழாக்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.

விஜய் மக்கள் இயக்கம்
தமிழக உள்ளாட்சி தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு கிடைத்த ஆதரவை கண்ட விஜய் வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலையொட்டி கட்சியை தொடங்கி ஸ்ட்டிராங்காக காலூன்றி 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

பிரசாந்த் கிஷோர்
இந்த நிலையில் அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோரை விஜய் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்ததாகவும் தெரிகிறது. ஆனால் இதை விஜய் தரப்பு மறுத்துள்ளது. அப்படியொரு சந்திப்பே நடக்கவில்லை என்றும் அது வதந்தி என்றும் கூறுகிறது.

பீஸ்ட் இசை வெளியீட்டு விழா
அது போல் பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தி அதில் அரசியல் பேச திட்டமிடப்பட்டிருந்ததாம். ஆனால் கொரோனாவை காரணம் காட்டி இசை வெளியீட்டு விழாவை விஜய் ரத்து செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான உண்மை காரணம் என்ன என தெரியவில்லை. கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் கொடுத்துள்ள நிலையில் அவர் கொரோனாவை காரணம் காட்டி நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications