ராயப்பேட்டை ‘க்ரீன் சிக்னல்’.. எடப்பாடிக்கு காத்திருந்த ஷாக்! சசிகலா-ஓபிஎஸ் குஷியாமே! அதகள அதிமுக..!
சென்னை: அதிமுகவில் ஓபிஎஸ் சசிகலா ஆகியோர் வெளியேற்றப்பட்டதற்குப் பிறகு தனது ஆதிக்கமே இருக்கும் என எதிர்பார்த்த அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நேற்றைய கூட்டத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. இதுவரை எடப்பாடி பழனிச்சாமி தான் பொதுச் செயலாளர் எனக் கூறிவந்த சில நிர்வாகிகளே சசிகலா, ஓபிஎஸ் ஆகிய வரை கட்சியில் சேர்க்க வேண்டும் என அவர் முன்னாலேயே குரல் எழுப்பியதை அவர் அவ்வளவாக ரசிக்கவில்லை என கூறுகின்றனர் அதிமுக நிர்வாகிகள்.
மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி தொகுதி வாரியாக நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்களை சந்தித்து அதிமுக தலைமையகமாக ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

கடந்த சில நாட்களாகவே ஆலோசனை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய கூட்டம் மிகவும் கவனம் பெற்று இருக்கிறது. காரணம் கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைக்காதது தான் தோல்விக்கு காரணம், நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும், சசிகலா - ஓபிஎஸ்ஐ மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என குரல் எழுப்பி இருக்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே தனது தீவிர ஆதரவாளர்களாக கருதப்பட்ட சிலரே மீண்டும் சசிகலா, ஓ.பன்னீர் செல்வத்தை கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என பேசுவார்கள் என எடப்பாடி பழனிச்சாமி எதிர்பார்க்கவில்லை. மேலும் கூட்டணி குறித்து மாவட்ட அளவிலான நிர்வாகிகளை பேசும் அளவுக்கு அதிமுக போய்விட்டதாக சில நிர்வாகிகள் புலம்பி இருக்கின்றனர். தனிப்பட்ட விரோதம் காரணமாக கட்சியை அழிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என சிலர் கொந்தளித்ததாகவும் கூறப்படுகிறது.
இப்படியான பேச்சுகளால் எடப்பாடி பழனிச்சாமி சற்று அதிர்ச்சி அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதிமுகவில் இது போன்ற பிரச்சனைகள் எழுவது ஒன்றும் புதிதல்ல. 2021ஆம் ஆண்டு முதல் இது போன்ற பிரச்சினைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் நீக்கம் உள்ளிட்ட பிளவுகளோடு அடுத்தடுத்த தோல்விகளும் எடப்பாடி பழனிச்சாமியை துவளச் செய்துள்ளது. இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா தரப்பிலிருந்து ஒருங்கிணைப்பு குழு செயல்பட்டு வரும் நிலையில் அதிமுகவிலும் ஒருங்கிணைப்பு குழு கோஷம் எழுந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிச்சாமி திட்ட வட்டமாக தெரிவித்திருக்கிறார். நிர்வாகிகளின் கோரிக்கைக்கிணங்க சசிகலா, ஓபிஎஸ்ஐ கட்சிக்குள் கொண்டு வந்தால் தனது நிலைமை என்னவாகும் என்பதை எடப்பாடி பழனிச்சாமி நன்றாக உணர்ந்து இருப்பதாகவும், இதன் காரணமாகவே நேற்றைய கூட்டத்தில் அவர் ஒருங்கிணைப்பு குழு மற்றும் மற்ற ஆலோசனைகளை புறக்கணித்து விட்டதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இல்ல விழாவில் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த சில மூத்த முன்னாள் அமைச்சர்கள் கட்சியை நிலைமை மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது, நிச்சயம் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியோ அந்த மூவரைத் தவிர யாரைக் கட்சிக்குள் கொண்டு வந்தாலும் எனக்கு சம்மதம்தான் என தெரிவித்திருந்தார். நேற்றைய கூட்டத்திலும் அதே கருத்தை தான் அவர் கூறினார் என்கின்றனர் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுகவினர்.
இந்த நிலையில் தங்களுக்கு ஆதரவான குரல்கள் அதிமுகவுக்குள்ளேயே இருந்திருப்பதை சசிகலா-ஓபிஎஸ் தரப்பு அறிந்து மகிழ்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து டுத்து அந்த நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேச சசிகலா ஓபிஎஸ் தரப்பு முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் சசிகலா ஓபிஎஸ்ஐ சில மூத்த முன்னால் அமைச்சர்கள் சந்தித்து பேசலாம் எனவும் இந்த சந்திப்பு ரகசியமாகவே இருக்கும் என்கின்றனர் அதிமுகவினர். இதனால் வரும் காலங்களில் அதிமுகவில் மேலும் பரபரப்பு அதிகரிக்கும், சட்டமன்றத் தேர்தலுக்குள் ஒரு வழியாக இணைப்பு நடவடிக்கைகள் இருக்கும் எனவும், அனைவரும் ஒன்றாக சேர்ந்து சந்திப்பதே திமுகவுக்கும் அனைவருக்கும் நல்லது என்கின்றனர் சசிகலா தரப்பினர்.












Click it and Unblock the Notifications