நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த டிடிஎஃப் வாசன்.. அதிகாலையில் சுற்றி வளைத்த போலீஸ்.. நடந்தது என்ன?
சென்னை: காஞ்சிபுரம் மருத்துவமனையிலிருந்து சென்னை மருத்துவமனைக்கு செல்வதாக கூறிய டிடிஎஃப் வாசன் நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த போது அவரை போலீஸார் கைது செய்ததாக சொல்லப்படுகிறது.
கோவையை சேர்ந்த டிடிஎஃப் வாசன் என்ற இளைஞர் விலையுயர்ந்த பைக்குகளில் சவாரி செய்து சாகசம் செய்து அதை வீடியோவாக எடுத்து தனது யூடியூப் சேனலில் பதிவிடுவார். இந்த சாகசங்களை பார்ப்பதற்காகவே அவருடைய சேனலுக்கு லட்சக்கணக்கானோர் பாலோயர்களாக உள்ளனர்.

2 கே கிட்ஸ்தான் இவரை அதிகமாக பின்தொடருகிறார்கள். ஏதாவது விழாவுக்கு வாசன் வந்துவிட்டால் போதும் அந்த இடத்தில் டிராபிக் ஜாம் உருவாகும் அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் சேர்ந்து விடுகிறார்கள்.
இவருடைய பிறந்தநாளுக்கு ரசிகர்கள் கூடியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து வாசனை எச்சரித்த போலீஸார் போக்குவரத்தை சரி செய்திருந்தனர். இவர் தற்போது மஞ்சள் வீரன் எனும் படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் டிடிஎஃப் வாசன் சென்னையிலிருந்து மகாராஷ்டிராவுக்கு பைக்கில் சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது காஞ்சிபுரம் அருகே சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலையில் ஸ்டண்ட் செய்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து வாகனம் நிலைத்தடுமாறி தலைக்குப்புற பைக் கீழே விழுந்தது. இதையடுத்து வாசனும் சுற்றுச்சுவரை தாண்டி போய் விழுந்தார். அவருக்கு மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து படுகாயமடைந்த வாசனை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு மீனாட்சி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு கையில் மாவுக் கட்டு போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து தான் சென்னையில் சிகிச்சை பெற்று கொள்வதாக கூறி தனது நண்பர்களை வரழைத்துள்ளார். அவர்களுடன் சென்னை மருத்துவமனைக்கு செல்வதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் மனித உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் வகையில் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வாசன் மீது பாலுசெட்டி சத்திரம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு பின்னர் சென்னையில் உள்ள நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த டிடிஎஃப் வாசனை இன்று அதிகாலை காஞ்சிபுரம் போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications