ஓசூர் மக்களே ஹேப்பியா.. பெங்களூர் போகலாம்.. சீக்கிரமே வருகிறது மெட்ரோ.. புது கலக்கல் அப்டேட்
பெங்களூர்- ஓசூர் மெட்ரோவை இணைக்கும் மெட்ரோ குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை: தென்னிந்தியாவில் முதல்முறையாக மாநிலங்களுக்கு இடையே அமையப் போகும் ஓசூர்- பெங்களூர் மெட்ரோ குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
நமது நாட்டில் வாகன நெரிசல் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதன் காரணமாக டிராபிக் நெரிசல் என்பது நாட்டின் பல முக்கிய நகரங்களிலும் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
அண்டை மாநிலமான கர்நாடக தலைநகர் பெங்களூர் குறித்து தனியாகச் சொல்லத் தேவையில்லை.. நாட்டிலேயே டிராபிக் பிரச்சனை அதிகமாக இருக்கும் நகரங்களில் ஒன்றாகப் பெங்களூர் உள்ளது.

ஓசூர்
தமிழக எல்லையில் அமைந்துள்ள முக்கிய தொழில் நகரான ஓசூர், பெங்களூரிலிருந்து சற்று அருகில் தான் அமைந்துள்ளது. ஓசூரில் வசிக்கும் மக்கள் பலரும் தினசரி வேலைக்காகப் பெங்களூருக்கு சென்று வருகின்றனர். இருப்பினும், டிராபிக் பிரச்சினையால் மக்கள் சென்று வரத் தாமதம் ஏற்படுகிறது. இதனிடையே முக்கிய தொழில் நகரான ஓசூரையும் டெக் துறையில் முன்னிலையில் இருக்கும் பெங்களூரையும் இணைக்கும் வகையில் மெட்ரோ திட்டம் முன்மொழியப்பட்டது.

பெங்களூர் ஓசூர் மெட்ரோ
பெங்களூரில் உள்ள பொம்மசந்திரா என்ற பகுதியையும் ஓசூரையும் இந்த மெட்ரோ திட்டம் இணைக்கும். இத்திட்டத்தை இரு மாநில அரசுகளும் இணைந்து மேற்கொள்ளும் என்றே கூறப்படுகிறது. இந்தச் சூழலில் பெங்களூரில் இருந்து ஓசூரை இணைக்கும் மெட்ரோ திட்டம் குறித்த சாத்தியக்கூறு ஆய்வுக்கு அனுமதி கோரிய சிஎம்ஆர்எல் நிறுவனம் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்திற்குக் கடிதம் எழுதியுள்ளது.

மத்திய அரசு
மத்திய அரசு இதற்கு அனுமதி கொடுத்த பிறகு.. இரு மாநிலங்களுக்கு இடையேயான மெட்ரோ ரயில் இணைப்புக்கான சாத்தியக்கூறு ஆய்வு நடத்த டெண்டர் விடப்படும் என்று தெரிகிறது. கர்நாடக அரசு ஏற்கனவே தனது கர்நாடக மெட்ரோவை தமிழ்நாடு வரை நீட்டிக்க அனுமதி கொடுத்துவிட்டது.. மத்திய அரசிடமும் கடந்தாண்டே இது குறித்துத் தெரிவித்துவிட்டது. 20 கிமீ தூரத்திற்கு அமையும் இந்த மெட்ரோ பாதையில், 11.7 கிமீ கர்நாடகாவிலும்.. 8.8 கிமீ தமிழ்நாட்டிலும் அமைய உள்ளது.

சாத்தியக்கூறு அறிக்கை
இதற்கான சாத்தியக்கூறு அறிக்கையைத் தயார் செய்யும் பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கே உள்ளது. இந்தத் தட்டம் மட்டும் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டால் தென்னிந்தியாவில் மாநிலங்களுக்கு இடையே இயங்கும் முதல் மெட்ரோவாக இது இருக்கும். கடந்த 2021இல் அனைத்து மெட்ரோ நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள் இடையே நடந்த கூட்டத்தில் தான் இந்தத் திட்டம் குறித்து முதலில் பேசப்பட்டது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் செயலாளர் தான் முதலில் பொம்மசந்திரா-ஓசூர் மெட்ரோவுக்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு வலியுறுத்தினார்.

பல ஆயிரம் பேர் பயன் பெறுவார்கள்
பெங்களூர் மற்றும் ஓசூர் இடைய அமையும் இந்த மெட்ரோ மூலம் பல ஆயிரம் பேர் பயன் பெறுவார்கள்.. பல முக்கிய நிறுவனங்களின் தொழிற்சாலைகளும் ஓசூரில் இருக்கிறது. பெங்களூரில் இருந்து இந்த தொழிற்சாலைகளுக்கு வரவும் இங்கிருந்து பெங்களூருக்கு ஈஸியாக செல்லவும் இந்த மெட்ரோ பயன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமின்றி ஓசூர்-கிருஷ்ணகிரி-தர்மபுரி பகுதியின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் இது நிச்சயம் ஊக்குவிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை..

விமான நிலையம்
இது தொடர்பாகக் கிருஷ்ணகிரி எம்.பி செல்லக்குமார் லோக்சபாவிலும் கேள்வி எழுப்பியிருந்தார். ஓசூரில் இருந்து பெங்களூருவுக்கு தினசரி பயணிக்கும் ஆயிரக்கணக்கானோரின் கனவுத் திட்டம் இது என்று குறிப்பிட்ட அவர், இத்திட்டத்தைச் செயல்படுத்தினால்.. இரு மாநில மக்களும் பெரியளவில் பயனடைவார்கள் என்றார். முன்னதாக இம்மாத தொடக்கத்தில் தான் பெங்களூர் கெம்பேகவுடா ஏர்போட் அருகே இருப்பதால் ஓசூரில் தனி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications