தென்மேற்குப் பருவக்காற்று தேனிப்பக்கம் வீசும் போது சாரல்... நீலகிரியில் கனமழை வெளுக்கும்
தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக நீலகிரியில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் அடுத்த ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழையும், சேலம் தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை பல மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் சாலைகளின் நடுவே மரங்கள் விழுந்துள்ளன.
நீர்ப்பிடிப்பு பகுதிகளான அப்பர்பவானி மற்றும் அவலாஞ்சி போன்ற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து அணைகளும் விரைவில் நிரம்ப வாய்ப்புள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படடுள்ளதால் மேட்டுப்பாளையம் பில்லூர் அணையும் நிரம்பியுள்ளது.
நீலகிரியில் கனமழை
நீலகிரியின் அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 21 செமீ மழை அளவு பதிவாகியுள்ளது. மேல்பவானியில் 12 செமீ, எமரால்டு பகுதியில் 11 செமீ மழை பதிவாகியுள்ளது. சின்னக்கல்லாரில் 10 செமீ, பந்தலூரில் 9 செமீ மழை பதிவாகியுள்ளது. வால்பாறை,பாபநாசம், தென்காசி, குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணைப்பகுதியிலும் மழை பதிவாகியுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மாவட்டங்களில் மழை
இதனிடையே வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் நீலகிரியில் மிக மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய திருப்பூர், திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மிதமானது முதல் லேசானது வரை மழை பெய்யக்கூடும்.
எந்தெந்த மாவட்டங்களில் மழை
நாளைய தினம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்கள் கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.
தேனி, தென்காசியில் மழை
வெப்பச்சலனம் காரணமாக 19,20ஆம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், நீலகிரி, கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்படும்.
சென்னையில் மழை
21ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்காலில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். குறைந்த பட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டி பதிவாகும்.
மீனவர்களுக்கு அறிவிப்பு
17,18ஆம் தேதிகளில் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். வடக்கு ஆந்திரா,ஒடிசா கடலோர பகுதிகளில் பலத்த காற்றுவீசக்கூடும். வடக்கு வங்கக் கடலில் சூறாவளி காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரபிக்கடலில் 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவித்துள்ளது.