வெளுக்கப்போகும் அதிகனமழை.. கேரளா, கர்நாடகாவிற்கு ரெட் அலர்ட்.. தமிழகமும் உஷார் நிலை
சென்னை: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இன்று அதிகனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் இரவு நேரங்களில் மலையோர மாவட்டங்களில் வசிப்பவர்கள் பயணங்களை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாகவே தொடங்கியது. தமிழகம், கர்நாடகாவில் மழை தீவிரமடையாத காரணத்தால் அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அசாமில் வசிக்கும் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கேரளாவில் தென்மேற்கு பருவமழை படிப்படியாக தீவிரமடையத் தொடங்கியுள்ளது. கேரளாவில் இன்று முதல் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கேரளா உள்ளிட்ட மூன்று மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
கேரளா, கர்நாடகா, அசாம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதால், அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஆந்திரா, கோவா, தெலங்கானா, தமிழ்நாடு, மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
கேரளாவில் உள்ள கண்ணூர் மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும், கேரளாவின் பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் முதல்வர் பினராயி விஜயன் முகநூல் பதிவில் மாநில மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை பதிவிட்டுள்ளார். பல்வேறு துறைகள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை பிரதிநிதிகளுடன் மாநில அவசர இயக்க மையம் செயல்பட்டு வருகிறது. அவசரகால பயன்பாட்டிற்காக பத்தனம்திட்டா, மலப்புரம், வயநாடு, இடுக்கி, கோழிக்கோடு, ஆலப்புழா மற்றும் திருச்சூர் ஆகிய இடங்களில் ஏழு NDRF குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மலைப்பாங்கான பகுதிகளுக்கு இரவு நேர பயணத்தை முடிந்தவரை தவிர்க்குமாறும், கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் காற்றின் அபாயங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் எந்தச் சூழ்நிலையிலும் யாரும் கடக்கவோ, குளிக்கவோ, மீன்பிடிக்கவோ, ஆற்றில் நுழையவோ கூடாது. மலைப்பாங்கான பகுதிகளுக்கு இரவுப் பயணத்தை முடிந்தவரை தவிர்க்கவும். கடலில் அலைகள் மற்றும் சீற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதால், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, அபாயப் பகுதிகளிலிருந்து விலகி இருக்க வேண்டும் எனவும் மீனவர்கள் கடலுக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று மூன்று மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பேரிடர் மீட்புப்படையினர் தயார் நிலையில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications