கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம்.. ஜெட் வேகத்தில் பணிகள்.. டெண்டர் கோரிய தெற்கு ரயில்வே
சென்னை: கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே 20 கோடியில் புதிய ரயில்நிலைய கட்டுமானப்பணிகள் தொடங்க உள்ளன. இதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தின் கட்டுமான பணிகளை, ஓராண்டுக்குள் முடிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் தென் மாவட்டங்களுக்கான பேருந்து சேவையளிக்கும் வகையில் புதிய பேருந்து நிலையத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

பயணிகளின் வசதிக்காக தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு எதிரே ரயில் நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதனையடுத்து கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்தது. அதன் அடிப்படையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 நடைமேடைகளுடன் ரயில் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய பேருந்து முனையம் கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் வசதிக்காக புதிய ரயில் நிலையம் அமைக்கப்படவுள்ளது. கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திற்கான வரைபடம் தயார் செய்யும் பணியில் தெற்கு ரயில்வே தீவிரமடைந்துள்ளது.
இந்த நிலையில் இன்றைய தினம் 20 கோடி மதிப்பில் கட்டுமான பணிகள் தொடங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் டெண்டர் இறுதி செய்யப்பட்டு 4 மாதங்களில் கட்டுமான பணிகள் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. கிளாம்பாக்கத்தில் ஓராண்டுக்குள் ரயில் நிலைய கட்டுமானப் பணிகளை முடிக்கவும் தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கடந்த ஜனவரி மாதம் தை பொங்கல் நாளில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பணிகள் முடிவடையாத நிலையில் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படுவதை அடுத்து தற்போது மழைநீர் வடிகால் பணிகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய ரயில் நிலைய கட்டுமானப்பணிகள் முடிவதற்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications