சிறப்பு ரயில்களால் ஒரு யூஸும் கிடையாது.. 6 ரயில்கள் ரத்து! சொதப்பிய தெற்கு ரயில்வே!
சென்னை: தீபாவளி முடிந்து சொந்த ஊர் திரும்ப சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை கொஞ்சமும் தொடர்பில்லாமல், விடுமுறை முடிந்து சில நாட்கள் கழித்தே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டன. இதனால் டிக்கெட் புக்கிங் பெரிய அளவில் இல்லை. எனவே 6 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
இன்று (அக்.20) தீபாவளி, அக்.21ம் தேதியும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே அக்.21, அக்.22 ஆகிய தேதிகளில் மக்கள் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு வேலைக்காக திரும்புவார்கள். ஆனால் தெற்கு ரயில்வே அறிவித்துள்ள சிறப்பு ரயில்களை பாருங்கள்.

- அக். 22 ஆம் தேதி பிற்பகல் 3.10 மணிக்கு புறப்படும் சென்னை சென்ட்ரல் - கோட்டையம் (06121) சிறப்பு ரயில்
- அக். 23 ஆம் தேதி பிற்பகல் 2.05 மணிக்கு புறப்படும் கோட்டயம் - சென்னை சென்ட்ரல் (06122) சிறப்பு ரயில்
- அக். 24, 26 தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் செங்கல்பட்டு - நெல்லை (06153) அதிவிரைவு சிறப்பு ரயில்
- அக், 24, 26 தேதிகளில் அதிகாலை 4 மணிக்கு புறப்படும் நெல்லை- செங்கல்பட்டு (06154) அதிவிரைவு சிறப்பு ரயில்
- அக். 28 ஆம் தேதி காலை 9.15 மணிக்கு புறப்படும் நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் (06054) சிறப்பு ரயில்
- அக். 29 ஆம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு புறப்படும் சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் (06053) சிறப்பு ரயில்
இவைதான் தெற்கு ரயில்வே அறிவித்த சிறப்பு ரயில். இதில் அக்.22ம் தேதி அறிவிக்கப்பட்ட கோட்டயம் சிறப்பு ரயில் அரக்கோணம், காட்பாடி, வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர் என கேரளாவுக்குள் செல்கிறது. இந்த தேதியில் சென்னைக்கு சிறப்பு ரயில் அறிவித்திருந்தல் கூட, கொங்கு, மேற்கு மற்றும் வட மாவட்ட மக்கள் பயனடைந்திருப்பார்கள். ஆனால் அக்.23ம் தேதிக்கு ரயில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. விடுமுறை அக்.21ம் தேதியோடு முடிவடைகிறது. ஒரு நாள் கூடுதலாக லீவு எடுத்தால் கூட அக்.22ம் தேதி புறப்பட்டே ஆக வேண்டிய மனநிலையில் பெரும்பாலானோர் இருப்பார்கள். ஆனால் அக்.23ம் தேதி என்பதால் சிறப்பு ரயிலால் மக்களுக்கு பெரிய அளவில் பலன் இல்லாமல் போய்விடுகிறது.
அதேபோல அக்.24,26ம் தேதிகளில் செங்கல்பட்டு-நெல்லை இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. செங்கல்பட்டிலிருந்து சிறப்பு ரயில் என்கிற லாஜிக்கை புரிந்துக்கொள்ளவே முடியவில்லை.
சில நாட்களுக்கு முன்னர் எழும்பூர் ரயில் நிலையத்தின் மேம்பாட்டு பணிகளுக்காக டெல்டா மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் தாம்பரத்திலிருந்து இயக்கப்பட்டது. இதனால் அந்த ரயில்களில் ஈ அடித்தது. வழக்கமான கூட்டம் கூட இல்லாமல் ரயில் குறைவான பயணிகளுடன் சென்றது. அப்படி இருக்கையில் செங்கல்பட்டிலிருந்து சிறப்பு ரயில் என்றால் அது யாருக்கான ரயில்? சென்னையில்தான் புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகம். அவர்கள் தாம்பரத்திற்கு சென்று ரயில் பிடிப்பதே சிரமமான காரியம். அப்படியெனில் செங்கல்பட்டிற்கு சென்று ரயில் பிடித்து போக வேண்டும் என்று தெற்கு ரயில்வே சொல்வதில் கொஞ்சம் கூட நியாயம் இல்லை என்று பலரும் கூறுகின்றனர்.
இந்த தேதிகளில் நெல்லையிலிருந்து செங்கல்பட்டுக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டதும் தேவையில்லாதது. சென்னைக்கு வரும் மக்கள் செங்கல்பட்டில் இறங்கி, அங்கிருந்து புறநகர் மின்சார ரயில்களை பிடித்து, எழும்பூர், சென்ட்ரல் வர சொல்வதெல்லாம் உச்சக்கட்ட கொடுமை.
அக்.28ம் தேதி காலை 9.15க்கு எதுக்கு சம்பந்தமே இல்லாமல் நாகர்கோவிலில் இருந்து சென்ட்ரலுக்கும், அக்.29ம் தேதி அதிகாலை 4.15க்கு சென்ட்ரலிலிருந்து நாகர்கோவிலுக்கும் அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயிலும் ஒன்னுத்துக்கும் உதவாத ரயில்கள்தான் என்று பயணிகள் புலம்புகின்றனர். சென்ட்ரலில் இருந்து அதிகாலை 4.15க்கு யாருங்க நாகர்கோவிலுக்கு புறப்படுவாங்க? அன்றைய தினம் விடுமுறை நாள் கூட கிடையாது. சும்மா பேருக்குனு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படுது என பயணிகளின் புலம்பலை பரவலாக கேட்க முடிகிறது.
தற்போது இந்த 6 ரயிகளிலும் போதுமான பயணிகள் முன்பதிவு இல்லாததால் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலே இருந்திருக்கலாம்.












Click it and Unblock the Notifications