என்ன டிரஸ் போட்ருக்க.. தனியாக ஏன் போனீங்க? பெண்களை விமர்சிப்பவர்கள் மனநோயாளிகள்..செளமியா விமர்சனம்
சென்னை: பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் பெண்களை நோக்கி உடை குறித்தும், ஆண் நண்பருடன் தனியாக ஏன் சென்றாய் என்று கேட்பதும் ஒருவித மனநோய் என விமர்சித்துள்ளார் சௌமியா அன்புமணி. மேலும், தமிழகத்தில் போதைப் பழக்கம் அதிகரித்து வருகிறது, வயதானோர் மதுவுக்கும், சிறுவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைக்கும் அடிமையாகி வருகின்றனர் என கூறியுள்ளார்.
பாமக மகளிரணி சார்பில் தொடர்ச்சியாக 100 சட்டமன்ற தொகுதிகளில் உள்ளரங்க கூட்டம் நடத்தி 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பரப்பரையை மேற்கொள்வது தொடர்பாக பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி தலைமையில் பாமக மகளிரணி மாநில , மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதல் முறையாக பாமக மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டத்தை தன்னுடைய தலைமையில் சௌமியா அன்புமணி கூட்டியது குறிப்பிடத்தக்கது. ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய சௌமியா அன்புமணி," இது ஒரு குடும்ப விழா. எனவேதான் பூக்கள் கொடுத்தும் வளையல் கொடுத்தும் உங்களை வரவேற்றோம்.

பாமக மகளிரணி
உங்க அண்ணன் அன்புமணி தான் பேப்பர், துண்டுச் சீட்டு என எதுவுமே இல்லாம மேடையில பேசுவார்.. என்னால அப்படியெல்லாம் முடியாது. போதைப் பழக்கம் அதிகரித்து வருகிறது, வயதானோர் மதுவுக்கும் , சிறுவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைக்கும் அடிமையாகி வருகின்றனர். போதைப் பழக்கம் இல்லாத நல்ல ஆண் பிள்ளைகளை கண்டறிந்து நம் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பது சவாலாகி வருகிறது. காவல்துறை, நீதித்துறை மருத்துவத்துறை இணைந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண் குழந்தைகளுக்கு, பெண்களுக்கு உடனடியாக தண்டனையை பெற்றுத்தர வேண்டும்.
பாலியல் வன்கொடுமை
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பிறகு நீதிமன்றம் சென்று நீதியை பெறும் பெண்களை வீராங்கனைகள் என கூற வேண்டும். அவர்களது துணிச்சலே தவறிழைத்தோருக்கு தண்டனை கிடைக்க காரணம். அது போன்ற பெண்களுக்கு நாம் ஆதரவாக இருக்க வேண்டும். கல்வி , வேலைவாய்ப்பு , மருத்துவம் இலவசமாக வழங்கப்பட வேண்டும். பல காவல்நிலையங்களில் போதுமான காவலர்கள் இல்லை. சில இடங்களில் இரண்டு காவலர்கள்தான் இருக்கின்றனர். அவர்கள் காவல் நிலையத்தை பூட்டிவிட்டுதான் புகார் குறித்து விசாரிக்க செல்லும் நிலை பல இடங்களில் உள்ளது.
சௌமியா அன்புமணி
2004 ம் ஆண்டுக்கு பிறகு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்பட அன்புமணி சுகாதாரத்துறை அமைச்சராக இருந்ததுதான் காரணம். தேர்தல் நெருங்கும்போது கடைசி நேரத்தில் சென்று மாம்பழத்திற்கு வாக்களியுங்கள் என்று கூறக் கூடாது. தேர்தலுக்கு முன்பே போதை உள்ளிட்டவற்றுக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டங்களை மகளிரணியினர் கிராம அளவில் நடத்த வேண்டும். பாடல், நடனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாமக சார்பில் உள்ளரங்க கூட்டங்கள் தொகுதி வாரியாக நடத்தப்பட வேண்டும்.
கோவை சம்பவம்
கோவையில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். ஆனால் அவர் மீதே விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. ஏன் அரைகுறையாக உடை உடுத்துகிறாய்? ஏன் இரவு நேரத்தில் நண்பருடன் சென்றாய் ? தனியாக ஏன் செல்கிறாய்? என பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணை நோக்கி கேள்வி கேட்பது ஒருவகையான மன நோய் போன்றது." என்றார்.












Click it and Unblock the Notifications