எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக?
சென்னை: அதிமுகவைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ-க்கள் மட்டும் இதுவரை எடப்பாடி பழனிசாமியை சந்திக்காமல் இருப்பது விவாதமாகி இருக்கிறது. எஸ்பி வேலுமணி, விஜயபாஸ்கர், சிவி சண்முகம், லீமா ரோஸ் உள்ளிட்டோர் மாற்று திட்டத்தை அரங்கேற்றி வருவதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் தமிழக அரசியல் களம் அதிரடித் திருப்பங்களால் உச்சகட்ட பரபரப்பில் இயங்கி வருகிறது. அண்மையில் சட்டப்பேரவையில் நடைபெற்ற தவெக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இரு பிரிவாகப் பிரிந்து வாக்களித்தது ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் அதிரவைத்தது.

எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் தலைமையில் சுமார் 25 எம்.எம்.ஏ.-க்களும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் 22 எம்.எல்.ஏ-க்களும் பிரிந்து செயல்பட்டு வந்தனர். இதனிடையே தவெக சார்பாக அமைச்சரவை பொறுப்பேற்றது. இதனால் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் அதிர்ச்சி அடைந்தனர். இப்படியான சூழலில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகினர்.
இன்று அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையாவும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமானார். இதனிடையே சில எம்.எல்.ஏ-க்கள் சிவி சண்முகம் அணியில் இருந்து எடப்பாடி பழனிசாமி பக்கம் தாவினர். சற்று முன் பாலகிருஷ்ண ரெட்டி, நத்தம் விஸ்வநாதன், அருண்மொழிதேவன், திருத்தணி கோ.அரி, ரவி மனோகரன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர்.
இந்த அசாதாரண சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கட்சியின் மூத்த நிர்வாகிகளும், தற்போதைய எம்.எல்.ஏ.க்களும் நேரில் சந்தித்து தங்களது ஆதரவை உறுதிப்படுத்தி வரும் நிலையில், குறிப்பிட்ட 11 முக்கிய எம்.எல்.ஏ.க்கள் இன்னும் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்காமல் இருப்பது அதிமுகவினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொண்டாமுத்தூர் எஸ்.பி. வேலுமணி, மயிலம் சி.வி. சண்முகம், நன்னிலம் ஆர். காமராஜ், பாலக்கோடு கே.பி. அன்பழகன், பாப்பிரெட்டிப்பட்டி மரகதம் வெற்றிவேல், பரமத்திவேலூர் சேகர், சங்கராபுரம் ராகேஷ், கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர், ஜோலார்பேட்டை கே.சி. வீரமணி, லால்குடி லீமா ரோஸ், விராலிமலை சி.விஜயபாஸ்கர் ஆகியோர் இன்னும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவில்லை.
அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்படும் கொங்கு மண்டலத்தில் எஸ்.பி. வேலுமணி, கே.பி. அன்பழகன், எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோரும், வட மாவட்டங்களில் அசுர பலம் கொண்ட சி.வி. சண்முகமும் இன்னும் எடப்பாடி பழனிசாமி சந்திக்காமல் தள்ளிப் போடுவது, அவர்கள் மாற்றுப் பாதையை நோக்கிப் பயணிக்கிறார்களா என்ற விவாதத்தைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications