எஸ்பி வேலுமணி ரெய்டு.. போலீசாரிடம் வாக்குவாதம் செய்த அதிமுகவினர்.. மா.செக்கள் உட்பட பலர் மீது வழக்கு
சென்னை: எஸ்.பி வேலுமணியின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் போது போலீசாருக்கு இடையூறு செய்ததாக அதிமுகவினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுக மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் உட்பட பலர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
Recommended Video
முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடைபெற்றது. முதலில் 50 இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டு பின்னர் 60 இடங்களாக உயர்த்தப்பட்டது. 811 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தவும், ஆவணங்களை கைப்பற்றவும் இந்த ரெய்டு நடந்ததாக கூறப்படுகிறது.
அறப்போர் இயக்கம், திமுகவின் ஆர். எஸ் பாரதி தொடுத்த வழக்கு, நேற்று முதல்நாள் காண்டிராக்டர் திருவேங்கடம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த ரெய்டு நடத்தப்பட்டது. இந்த ரெய்டை தொடர்ந்து 17 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

வழக்கு
இதில் குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் நேற்று மாலை சோதனை நிறைவு பெற்றது. மொத்தம் 12 மணி நேரம் நடந்த இந்த ரெய்டின் முடிவில் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்து ரூபாய் 13.08 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்து உள்ளது. இது போக பல்வேறு பைல்கள், ஒப்பந்த விவரங்கள், ஆவணங்கள் வேலுமணியின் வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தீவிரம்
இதனால் எஸ்.பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு புகார்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சென்னை ஹைகோர்ட்டில் இவருக்கு எதிராக நடக்கும் விசாரணையும் இதனால் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நேற்று வேலுமணியின் வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்து மாநகராட்சி ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணங்கள், டெண்டர் விடப்பட்டதற்கான ஆவணங்கள். லேப்டாப்கள், பல்வேறு ஹார்டு டிஸ்க்குகள், 2 கோடி மதிப்பிலான வைப்புத்தொகை பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

போராட்டம்
நேற்று சென்னை மற்றும் கோவையில் இந்த ரெய்டு நடக்கும் போது அதிமுகவினர் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். முக்கியமாக சென்னையில் எஸ்.பி வேலுமணி விசாரிக்கப்பட்டு வந்த சட்டசபை இல்லம் முன்பு அதிமுகவினர் ரகளையில் ஈடுபட்டனர். இன்னொரு பக்கம் கோவையில் குனியமுத்தூரில் உள்ள வேலுமணியின் வீடு முன்பும் அதிமுகவினர் பலர் கூடி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ரெய்டை நிறுத்தும்படி கூச்சல் போட்டு கோஷம் எழுப்பி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.

கூச்சல்
குனியமுத்தூரில் கூட நேற்று அதிமுகவினரிடையே பதற்றம் ஏற்பட்டது. இதனால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அங்கு கூடிய அதிமுகவினருக்கு கட்சி சார்பாக காலை உணவு, மத்திய உணவு, இடையில் ரோஸ் மில்க் , டீ, காபி என்று சிற்றுண்டிகளும் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து காலையில் இருந்து மாலை ரெய்டு முடியும் வரை எஸ்.பி வேலுமணி வீடு முன்பு அதிமுகவினர் கூடி இருந்தனர். இதில் அதிமுகவினர் சிலர் குனியமுத்தூரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் அதிகாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ரகளையில் ஈடுபட்டனர். பேரிகேடை வைத்து போலீசாரை பணி செய்ய விடாமல் தடுக்க முயன்றனர்.

ரகளை
அதேபோல் நேற்று சட்டமன்ற இல்லத்தில் எஸ்.பி.வேலுமணியை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரித்து வந்தனர். நேற்று காலை ரெய்டின் போது எஸ்.பி.வேலுமணி சட்டமன்ற இல்லத்தில் அலுவல் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தனது அறையில் இருந்த போது போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில் டிஎஸ்பி ராமதாஸ் தலைமையில் 2 ஆய்வாளர்கள் வேலுமணியிடம் துருவி துருவி கேள்விகளை எழுப்பினார்கள். தொடர்ந்து மாலை வரை இந்த விசாரணை நீடித்தது.

கூட்டம் கூடியது
இந்த விஷயம் தெரிந்தவுடன் அதிமுகவினர் அங்கு குவிந்தனர். கூட்டம் கூட்டமாக அதிமுக நிர்வாகிகள் சட்டசபை இல்லம் முன்பு குவிந்தனர். அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் ஆதிராஜாராம், வெங்கடேஷ் பாபு, பாலகங்கா, ராஜேஷ், விருகை ரவி அங்கே போலீசாரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டனர். அதோடு போலீசாரிடம் வாக்குவாதம் செய்துவிட்டு உள்ளே சட்டமன்ற விடுதி வளாகத்திற்குள்ளும் சென்றனர். இதனால் அங்கு கொஞ்சம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

வழக்கு
இங்கு அதிமுகவினர் பலர் கூடியதால் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் போது இடையூறு செய்ததாக அதிமுகவினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீசாரை பணி செய்ய விடாமல் இடையூறு செய்ததாகவும், ரகளையில் ஈடுபட்டதாகவும் சென்னையிலும், கோவையிலும் அதிமுகவினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

வழக்கு பதியப்பட்டவர்கள் லிஸ்ட்
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆதிராஜாராம், வெங்கடேஷ் பாபு, பாலகங்கா,ராஜேஷ், விருகை ரவி மற்றும் முன்னாள் எம்பி வெங்கடேசன் உட்பட 10 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. 3 பிரிவுகளில் இவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக ஒன்றுகூடுதல், கொரோனா காலம் என்பதால் தெரிந்தே நோய் பரப்பும் வகையில் செயல்படுதல், அரசு உத்தரவை மீறுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் இவர்கள் அனைவரின் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

கோவையிலும் வழக்கு
திருவல்லிக்கேணி போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிந்துள்ளனர். நேற்று சட்டசபை இல்லம் முன்பு ரகளை ஏற்பட்ட போது அதை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சிசிடிவி மூலம் தீவிரமாக கண்காணித்து வந்தார். இந்த நிலையில்தான் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது. அதேபோல் கோவையில் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு கூடிய அதிமுகவினர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவ காரணமாக இருந்தாகவும், சட்ட விரோதமாக கூடியதாகவும் கோவையில் 520 பேர் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது. மேலும் போலீசாரை வேலை செய்ய விடாமல் தடுப்பது, ரகளையில் ஈடுப்பட்டது, போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி 12 பேர் மீதும் வழக்கு பதியப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications