"ஒரு ரூபாய் கூட கைப்பற்றவில்லை.. அரசியல் ரீதியாக எதிர்த்தால் ரெய்டா?" திடீரென ஆவேசமான எஸ்.பி வேலுமணி
சென்னை: லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி. வேலுமணி, திமுக அரசின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது டெண்டர் முறைகேடு உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான 59 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர்.
இந்நிலையில், வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை மற்றொரு வழக்கைப் பதிவு செய்திருந்தது.

சோதனை
இது தொடர்பாக அவருக்குச் சொந்தமான இடங்களில் காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சோதனை நடத்தினர். 58 இடங்களில் காலை 6.30 மணிக்குத் தொடங்கிய இந்த சோதனை இரவு 8 மணியளவில் நிறைவடைந்தது. ரெய்டின் போதே, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உட்பட பலரும் வேலுமணி வீட்டின் முன் திரண்டனர். இந்நிலையில், ரெய்டு முடிந்ததும் வீட்டின் முன் கூடியிருந்த அதிமுக தொண்டர்களை எஸ்.பி. வேலுமணி சந்தித்தார்.

குற்றச்சாட்டு
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவை அரசியல் ரீதியாக எதிர்த்தவர்கள் வீடுகளில் சோதனைகள் நடத்தப்படுவதாகக் குற்றஞ்சாட்டினர். முன்பு சோதனை நடத்திய போது எப்படி ஒரு ரூபாய் கூட கைப்பற்ற வில்லையே, அதேபோலத் தான் இப்போதும் தனது வீட்டில் இருந்து ஒரு ரூபாயைக் கூட லஞ்ச ஒழிப்புத் துறை கைப்பற்றவில்லை என்றும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது வீடு, சகோதரர் வீடுகளில் ரெய்டு நடந்துள்ளது. திமுகவை அரசியல் ரீதியாக எதிர்த்தவர்கள் வீடுகளில் சோதனைகள் நடத்தப்படுகிறது. அரசியல் ரீதியாகப் பழி வாங்கும் நோக்கிலேயே காரணமாகவே 2ஆவது முறையாக இந்த ரெய்டு நடந்துள்ளது. இந்த சோதனையில் அவர்கள் ஒரு ரூபாயைக் கூட கைப்பற்றவில்லை.

எதுவும் கைப்பற்றவில்லை
சில ஊடகங்களில் பல லட்சம் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியிட்டுள்ளனர். ஆனால் இது முற்றிலும் தவறான ஒன்று. கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த ரெய்டில் எப்படி அவர்களால் எதையும் கைப்பற்ற முடியவில்லையோ அதேபோல இன்றும் அவர்களால் எதையும் கைப்பற்ற முடியவில்லை. இது ஜெயலலிதா வளர்த்தெடுத்து இயக்கம். இதுபோன்ற சோதனைகளைச் சட்ட ரீதியாகச் சந்திப்போம்

குறி வைக்கப்படுகிறோம்
திமுகவும் முதல்வர் ஸ்டாலினும் இதுபோல ரெய்டு நடத்தி எங்களை முடக்க முயல்கின்றனர். நாங்கள் முதல்வர் எதிர்த்துப் பேசக் கூடாது என்பதற்காகவே இந்த ரெய்டு நடத்தி உள்ளனர். எம்ஜிஆர் தோற்றுவித்து, ஜெயலலிதா வளர்த்தெடுத்த இந்த இயக்கம். இப்போது ஈபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் செயல்பட்டு வருகிறது. ஜெயலலிதா இறந்த பின்னர், குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க நினைத்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நாங்கள் இருந்தோம். இதன் காரணமாகவே எங்களைக் குறி வைத்து இப்போது ரெய்டு நடத்துகின்றனர்.

கோவம்
அதேபோல சட்டசபைத் தேர்தலில் கோவையில் இருக்கும் அத்தனை தொகுதிகளிலும் அதிமுக வென்றது. இதுவே அவர்களுக்கு கடும் கோபத்தைக் கொடுத்தது. அதேபோல உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் கடுமையாக வேலை பார்த்தோம். திமுக முறைகேடாக வென்றுள்ளது. தேர்தல் இயந்திரத்திலேயே முறைகேடு செய்துள்ளனர். 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா நோயாளிகள் வாக்களிக்கும் நேரத்தில் ஆயிரக் கணக்கில் போலி வாக்குகள் போடப்பட்டுள்ளது.

பழிவாங்கும் நடவடிக்கை
கோவை மக்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டிய சூழ்நிலையே இல்லை. ஏனென்றால் கடந்த 5 ஆண்டுகளில் பல திட்டங்களை, வளர்ச்சி பணிகளை அளித்துள்ளோம். கோவையில் நாங்கள் முழு வெற்றி பெற்று, மேயர் பதவியைப் பிடிக்கும் சூழல் இருந்தது. ஆனால், அவர்கள் மோசடி செய்து வென்றுவிட்டனர். இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு பழிவாங்கும் நடவடிக்கையாக ரெய்டு நடத்தியுள்ளனர்.

பழிவாங்கும் முதல்வர்
முதல்வர் ஸ்டாலின் மேடைகளில் பேசும்போது மட்டும், நான் அனைவருக்கும் பொதுவானவர் எனக் கூறுகிறார். ஆனால், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மாநிலத்தின் வளர்ச்சி பணிகளுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். சம்பந்தமே இல்லாத நபர்களின் வீடுகளிலும் கூட ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. அதை டிவியில் தான் பார்த்துத் தெரிந்து கொண்டேன்" என்று அவர் தெரிவித்தார்.

போலீசார்
மேலும், ரெய்டு சமயத்தில் போலீசார் கண்ணியம் குறைவாக நடத்தினரா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், போலீசார் பற்றிப் பேச விரும்பவில்லை என்றும் அவர்களைப் பின்னாள் இருந்து சிலர் ஏவி விடுகின்றனர் என்றும் குற்றஞ்சாட்டினார். மேலும், எந்தவொரு அரசாலும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்பதால் அவர்கள் யாருக்கும் அஞ்சக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்,












Click it and Unblock the Notifications