எஸ்.பி வேலுமணிக்கு எதிராக ஆர் எஸ் பாரதி தொடர்ந்த வழக்கு... லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டும் பின்னணியும்
எஸ்.பி வேலுமணிக்குச் சொந்தமான வீடுகளிலும் அவரது உறவினர் வீடுகளிலும் காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எம்எல்ஏ விடுதியில் எஸ்.பி வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் க
சென்னை: என் மீதானக் குற்றச்சாட்டை ஸ்டாலின், நிரூபணம் செய்தால், நான் அரசியலைவிட்டே விலகிக் கொள்கிறேன். அதேபோல், நிரூபிக்கத் தவறிவிட்டால், மு.க.ஸ்டாலினும் தி.மு.க தலைவர் பதவியிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்று கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சவால் விட்டிருந்தார் எஸ்.பி வேலுமணி. அவரது வீட்டில்தான் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர் எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தி.மு.கவின் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் ஜெயராம் வெங்கடேசன் ஆகியோர் தொடர்ந்த வழக்கு தற்போது எஸ்.பி வேலுமணிக்கு எதிராக விஸ்வரூபம் எடுத்துள்ளது.
Recommended Video
காலை முதல் எஸ்.பி வேலுமணிக்குச் சொந்தமான வீடுகளிலும் அவரது உறவினர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எம்எல்ஏ விடுதியில் எஸ்.பி வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை செய்து வருகின்றனர்.
எஸ்.பி வேலுமணியின் வீடு, சகோதரர் வீடு, உறவினர்கள் வீடு என தொடர்ந்த ரெய்டு ஆடிட்டர் வீடு வரை நீண்டுள்ளது. இந்த ரெய்டுக்கும் வழக்குப் பதிவுக்கும் மூல காரணமே திமுகவின் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் ஜெயராம் வெங்கடேசன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குதான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை கோவையில் டெண்டர் முறைகேடு
சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்ததாக முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான புகார் மீது நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட கோரி தி.மு.க சார்பில் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராம் வெங்கடேசன் ஆகியோர் சார்பில் கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

முகாந்திரம் இல்லை என அதிமுக தகவல்
இந்த வழக்கு கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் 220 டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாக எஸ்.பி வேலுமணிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் உள்ளதா என்பது குறித்து ஆரம்பகட்ட விசாரணை முடிவடைந்திருப்பதாகவும், அதில் வேலுமணி மீது வழக்கு பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என முதல்வர், அமைச்சரவை, தலைமை செயலாளருக்கு அறிக்கை அனுப்பியதாகவும், அதை அவர்கள் ஏற்றுகொண்டதாகவும், அதனால் இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்றும் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது அதிமுக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாறிய ஆட்சி
கடந்த மே மாதம் திமுக ஆட்சிக்கு வந்தது. ஜூன் மாதம் மீண்டும் இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கின் ஆரம்பகட்ட விசாரணை முடிவடைந்தாலும் அமைச்சருக்கு நற்சான்று அளிக்கப்படவில்லை என்றும் இந்த வழக்கை நேரடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் நிறைய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டியிருப்பதால் வழக்கு விசாரணையை நேரடி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும், தற்போது ஆட்சி மாறி உள்ளதால் சூழலும் மாறிவிட்டது. எனவே வழக்கு விசாரணை ஒத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அரசு வழக்கறிஞர் தகவல்
தலைமை நீதிபதி சஞ்சீவ் பேனர்ஜி நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம் ஆஜராகி கணக்கு தணிக்கை அறிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளதால் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு விசாரணைக்கு பின் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் எனவும் தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர் சண்முகசுந்தரம் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தள்ளி வைத்த ஹைகோர்ட்
அப்போது நீதிபதிகள் முழுமையாக விசாரணை நடத்தி முறைகேடுகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினர். மேலும் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக் கோரிய வழக்கை ஆகஸ்ட் 2 வது வாரத்துக்கு தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

53 இடங்களில் ரெய்டு
உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தற்போது எஸ்.பி வேலுமணி வீட்டிலும் அவரது சகோதரர், உறவினர்கள் வீடுகள், ஆடிட்டர் வீடு உள்ளிட்ட 53 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த சோதனையின் அடிப்படையில் எஸ்.பி.வேலுமணி, அவரது உறவினர்கள், பங்குதாரர்கள் என மொத்தம் 17 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

எப்ஐஆர் பதிவு
செந்தில் அண்ட் கோ பங்குதாரர் அன்பரசன், கே.சி.பி. என்ஜினீயர்ஸ் பிரைவேட் லிமிடெட், கே.சி.பி. என்ஜினீயர்ஸ் வேளாண் இயக்குனர் சந்திரபிரகாஷ், இயக்குனர் சந்திரசேகர், எஸ்.பி.பில்டர்ஸ் ஆர்.முருகேசன், ஜேசு ராபர்ட் ராஜா, சி.ஆர்.கன்ஷ்ட்ரக்ஷன், ராஜன் மற்றும் சில நிறுவனங்களின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி ஒப்பந்தத்தில் ரூ.464 கோடி ஊழல் செய்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல கோவை மாநகராட்சியில் டெண்டர் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனக்கு நெருக்கமானவர்களுக்கு 811 கோடி ரூபாய் அளவிற்கு டெண்டர் ஒதுக்கீடு செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications