பவுண்டரி அடிப்பாரா வங்கத்து தீதி..தலையெழுத்தை தீர்மானிக்கும் ’பஞ்சபூத’ மாவட்டங்கள்! பரபரப்பில் பாஜக!
கொல்கத்தா: பரபரப்பாக நடைபெற்று வந்த மேற்கு வங்க சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த முதலமைச்சர் யார் என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் தீவிர கணக்குப் போட்டிகள் தொடங்கியுள்ளன. பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள், பாஜக ஆட்சியமைக்கும் எனவும், கடும் போட்டி நிலவும் எனவும் கூறுகின்றன. இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் உள்ள 5 முக்கிய மாவட்டங்களின் முடிவுகள் தான் ஆட்சி யார் கைக்கு போகும் என்பதை தீர்மானிக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
மேற்கு வங்கத்தில் மொத்தமாக இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல் கட்டமாக ஏப்ரல் 23ஆம் தேதி 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக நேற்று (ஏப்ரல் 29ஆம் தேதி) மீதமுள்ள 142 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்தது.

காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற இந்த வாக்குப்பதிவில், மாலை நேர நிலவரப்படி 91 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாகியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிக வாக்குப்பதிவு காரணமாக இந்த தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் பெற்றதாக பார்க்கப்படுகிறது.
மம்தா பானர்ஜி
இந்த தேர்தலில், தற்போதைய முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஆட்சியை பிடிக்க முயற்சி செய்து வருகிறது. அதே நேரத்தில் பாஜகவும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் கடும் போட்டியை வழங்கி வருகிறது. இதற்கு கூடுதலாக காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளும் களத்தில் இருப்பதால், பலமுனைப் போட்டி நிலவி வருகிறது.
5 முக்கிய மாவட்டங்கள்
இந்த தேர்தலில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுவது 5 முக்கிய மாவட்டங்கள். அவை கொல்கத்தா, ஹவுரா, 24 வடக்கு பர்கானாஸ், 24 தெற்கு பர்கானாஸ், நாடியா ஆகிய மாவட்டங்கள் ஆகும். இந்த 5 மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சியை அமைக்கும் என்ற ஒரு அரசியல் மரபு அங்கு இருந்து வருகிறது. கடந்த தேர்தல் வரலாறுகளும் இதையே உறுதி செய்கின்றன.
2011 - 2026 சட்டசபை தேர்தல்கள்
2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் இந்த 5 மாவட்டங்களில் உள்ள 108 தொகுதிகளில் 82 இடங்களை கைப்பற்றிய திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. அதேபோல் 2016 தேர்தலில் இந்த மாவட்டங்களில் 91 இடங்களையும், 2021 தேர்தலில் 97 இடங்களையும் வென்றது. இதனால் இந்த பகுதிகள் ஆட்சியை தீர்மானிக்கும் முக்கிய மையங்களாக பார்க்கப்படுகின்றன. இந்த முறை தேர்தலிலும் இந்த 5 மாவட்டங்களில் கடும் போட்டி நிலவியுள்ளது.
பெண் வாக்காளர்கள்
குறிப்பாக நகர்ப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் வாக்காளர்களின் மனநிலை எவ்வாறு மாறியுள்ளது என்பது முடிவுகளை தீர்மானிக்கும் முக்கிய காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது. பெண் வாக்காளர்கள், இளைஞர்கள் மற்றும் முதல் முறையாக வாக்களித்தவர்கள் எந்தக் கட்சிக்கு ஆதரவு அளித்துள்ளனர் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய அம்சமாக உள்ளது.
திரிணமூல் காங்கிரஸ்
மேலும், இந்த தேர்தலில் திரிணமூல் காங்கிரசுக்கு எதிராக பாஜக வலுவான சவாலை முன்வைத்துள்ளது. அதோடு காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணிகளும் சில பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால், வாக்குகள் பிளவு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. மொத்தத்தில் பார்க்கும்போது, மேற்கு வங்கத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை தீர்மானிப்பதில் இந்த 5 மாவட்டங்களின் முடிவுகள் மிக முக்கிய பங்காற்றும் என்பது உறுதியாகியுள்ளது. மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் முடிவுகளை காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications