அதிமுக தொடர் தோல்வி ஏன்.. எடப்பாடியை இறங்கி வர சொல்லுங்க.. வேலுமணி தடாலடி
சென்னை: தமிழக அரசியல் களம் சட்டமன்ற தேர்தலில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. சட்டமன்ற தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் திரண்டுள்ளனர். அதிமுக உடைந்துள்ள நிலையில், "கட்சியை உடைத்துவிட்டோம் என்று அவதூறு பரப்ப வேண்டாம். கட்சி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. ஆரோக்கியமான முடிவை எடுக்க வேண்டும். அதற்கு எடப்பாடி இறங்கி வரவேண்டும்" என வேலுமணி கூறியுள்ளார்.
சட்டமன்ற தேர்தல் முடிந்தும் தமிழக அரசியல் களத்தின் பரபரப்பு ஓயவில்லை. நீண்ட இழுபறிக்கு பிறகு விஜய் முதலமைச்சராக பதவியேற்று கொண்டார். தவெகவுக்கு பல்வேறு கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி வருகிறார்கள். அதிமுகவில் உள்கட்சி பிரச்சனை வெடித்து கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமியின் அணி, வேலுமணி அணி என்று இரண்டாக பிரிந்துள்ளது. வேலுமணி அணி எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அவதூறு வேண்டாம்
அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "அதிமுகவை உடைக்கிறோம் என்று எங்கள் மீது அவதூறு பரப்ப வேண்டாம். சிலர் அதை வேண்டுமென்றே பரப்பி வருகிறார்கள். சி.வி சண்முகம் தெளிவாக சொல்லிவிட்டார். எங்களுக்கு அந்த நோக்கமே இல்லை. இது புரட்சி தலைவரால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி. நானோ, சி.வி. சண்முகம், தங்கமணி ஆகியோரின் தந்தைகள் அப்போதிருந்து கட்சியில் உள்ளனர்.
கட்சி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. 2021 சட்டமன்ற தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல், 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கான வெற்றி வாய்ப்பு இருந்தது. அது கை நழுவி சென்றுவிட்டது. இந்த தேர்தலிலும் அதிமுக ஆட்சியமைக்கும் நிலை இருந்தது. தோல்வி குறித்து சில கேள்விகளை எழுப்பியுள்ளோம். அதிமுக எப்போதும் உடையாது. அதற்கு நாங்கள் காரணமாக இருக்க மாட்டோம்.
முடிவு வேண்டும்
கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து நாங்கள் இருக்கிறோம். பொதுச்செயலாளர் பொதுக்குழுவை கூட்டி ஒரு ஆரோக்கியமான முடிவை எடுக்க வேண்டும். அதற்கு எடப்பாடி பழனிசாமியும் இறங்கி வர வேண்டும். கட்சியை கட்டுக்கோப்பாக கொண்டு செல்ல வேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications