"நீங்க உத்தரவு போட முடியாது.." அதிமுக எம்எல்ஏ பேச்சை அவைக்குறிப்பிலிருந்து நீக்கிய சபாநாயகர்!
சென்னை: சட்டசபையில் வனத்துறை அமைச்சருக்கு உத்தரவு போடும் வகையில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலனின் பேச்சை அவைக்குறிப்பிலிருந்து நீக்கினார் சபாநாயகர் அப்பாவு.
மேலும், அமைச்சருக்கு நீங்க உத்தரவு போட முடியாது எனக் கூறி அதிமுக எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலனை அவரது இருக்கையில் அமர வைத்தார் சபாநாயகர்.
கூடலூர் தொகுதி எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலனின் இந்தப் பேச்சை அவரது சொந்தக் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களே ரசிக்கவில்லை.

சட்டசபை கூட்டம்
தமிழக சட்டசபையில் வேளாண்மை, கால்நடை மற்றும் மீன்வளத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடைபெறுகிறது. முன்னதாக கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். அந்த வகையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் காப்புக்காடு பகுதியில் சாலை அமைப்பது தொடர்பாக அரசுக்கு கோரிக்கை ஒன்றை முன் வைத்தார்.

அமைச்சருக்கு உத்தரவு
அதன் மீது பதிலளிப்பதற்கு எழுந்த வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனை அதற்குள் குறுக்கிட்ட அதிமுக எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன், இயலாது, முடியாது, பரிசீலிக்கப்படும் என்பன போன்ற வார்த்தைகளை எல்லாம் விட்டுவிட்டு செய்து கொடுப்பதாக கூற வேண்டும் என அறியாமையில் அமைச்சருக்கு உத்தரவு போட்டார். இவரது இந்தப் பேச்சைக் கேட்டு கோபப்படுவதா சிரிப்பதா என நினைத்த சபாநாயகர் அப்பாவு, தனது மேஜையில் இருந்த மணியை ஓங்கி அடித்து அவரை அமருமாறு கூறினார்.

அவைக்குறிப்பு
மேலும், அமைச்சருக்கெல்லாம் நீங்க உத்தரவு போட முடியாது என பொன்.ஜெயசீலனுக்கு பாடம் எடுத்ததோடு, முதலில் அமருங்க என கறார் காட்டினார். மேலும், அதிமுக எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலனின் பேச்சை அவைக் குறிப்பிலிருந்து நீக்குவதாக அறிவித்தார். இதனிடையே மிஸ்டர் கூலாக இது தொடர்பாக பதிலளித்த வனத்துறை அமைச்சர், 10 ஆண்டுகளாக உங்க ஆட்சி நடந்தபோது இதைப்பற்றி வாயே திறக்காமல் இப்போது கூறுகிறீர்கள் எனச் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் பதில்
இருப்பினும் திமுக அரசு மீது நம்பிக்கை வைத்து அதிமுக எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்திருப்பதால், இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகளை ஆய்வு செய்ய வைத்து முதல்வரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்தார். இதனிடையே ஸ்மார்ட்டாக பேசுவதாக நினைத்து அமைச்சருக்கே உத்தரவு போடும் வகையில் பொன்.ஜெயசீலன் பேசியதை அவையில் இருந்த அதிமுக உறுப்பினர்களே ரசிக்கவில்லை.












Click it and Unblock the Notifications