புஸ்ஸி ஆனந்துக்கு அமித்ஷாவுடன் தொடர்பா? ரஜினி வராததால் விஜய்யை இறக்கியதா பாஜக! அப்பாவு சந்தேகம்
சென்னை: தவெக பொதுச்செயலாளராக இருக்கும் புஸ்ஸி ஆனந்த் பற்றி நிறைய விஷயங்கள் வருகிறது. அவர் புதுச்சேரியில் உள்ள பாஜக தலைவருடன் நெருக்கமாக இருப்பதாகவும், அமித்ஷாவுடன் நெருக்கமாக இருப்பதாகவும் தகவல்கள் வருகிறது. விஜய் தான் ஏ டீம், பி டீம் இல்லை என சொல்வதை வைத்துபார்க்கும் போதுதான் சந்தேகம் ஏற்படுகிறது என்று சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
ரஜினி கட்சி ஆரம்பிக்காததால் அதற்கு பதிலாக விஜயை பாஜக அரசியலில் இறங்க வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது என்று அப்பாவு கூறினார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அப்பாவு, நடிகர் விஜய் அரசியலுக்கு வருகை தந்துள்ளது குறித்தும், திமுக தான் எதிரி என்று கூறியதற்கும் கருத்து தெரிவித்துள்ளார். சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:-

அரசியல் கட்சியை விஜய் ஆரம்பித்துள்ளார். விஜய் கட்சி ஆரம்பித்ததற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். அந்த வாழ்த்தோடு என்னுடைய வாழ்த்தையும் நான் சேர்த்துக்கொள்கிறேன். விஜய் கட்சி ஆரம்பித்து வருவதில் ஆட்சேபனை யாருக்கும் கிடையாது. ஏற்கனவே நிறைய நடிகர்கள் ஆரம்பித்து இருக்கிறார்கள். சரத்குமார், பாக்யராஜ், கருணாஸ் உள்பட நிறைய பேர் ஆரம்பித்து உள்ளார்கள்.
விஜய் கட்சியின் பொதுச்செயலாளராக இருக்க கூடிய புஸ்சி ஆனந்த்திற்கு பாஜகவுடன் தொடர்பு இருப்பதாக தகவல் வருகிறதே அது பற்றி என்ன சொல்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த அப்பாவு, " புஸ்ஸி ஆனந்த் பற்றி நிறைய விஷயங்களை பத்திரிகையாளர்களாகிய நீங்கள்தான் சொல்லித்தருகிறீர்கள். அவர் பாண்டிச்ச்சேரியை சேர்ந்தவர்..எம்.எல்.ஏவாக இருந்தவர்.
அங்கே பாஜக அமைச்சருக்கு ரொம்ப வேண்டப்பட்டவர். அதேபோல பாஜகவின் முன்னணி தலைவர்கள் அமித்ஷா மற்றும் இன்னும் பல முக்கிய தலைவர்களுடன் அவருக்கு உறவு உண்டு. அப்படிப்பட்ட பாஜகவுடன் நெருக்கமானவராக இருக்க கூடியவரை தவெக கட்சியின் பொதுச்செயலாளராக எப்படி போட்டார்கள் என்று எனக்கு தெரியல.. அதுபற்றி எனக்கு தெரியல.. எல்லாம் பத்திரிகையாளர்கள்தான் அப்படி சொல்கிறார்கள். ஏ டீம், பி டீம் என்று அவர்கள் சொல்வதுதான் சந்தேகத்தை கிளப்புகிறது.
திராவிட மாடல் என்ற பெயரில் கொள்ளை அடிக்கிறார்கள் என்று விஜய் திமுக குறித்து விமர்சனம் செய்தது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அப்பாவு, "கட்சி ஆரம்பிக்கும் போது இந்த வார்த்தைகள் எல்லாம் அவர் தவிர்த்து இருக்கலாம் என்பதுதான் என்னுடைய கருத்து. நீங்கள் கேட்டதால் சொல்கிறேன்.. நான் சொல்லவில்லை.
விஜய்யின் அப்பா, புஸ்சி ஆனந்த் பற்றி கூறும் போது, என் மகன் விஜய்யுடன் இருப்பவர்கள் கிரிமினல்தான் இருக்கிறார்கள் என்று சொன்னார். புஸ்ஸ்சி ஆனந்தை கிரிமினல் என்று சொல்லக்கூடிய தொனியில் பேசினார். நான் சொல்லவில்லை. விஜய் அப்பாதான் கூறினார். அது என்ன பிரச்சினைக்காக சொன்னார் என்று தெரியவில்லை. ஒரு சமயம் கிரிமினல் இப்போது நல்ல ஆளாக ஆகியிருக்கலாம்.. அதுவும் எனக்கு தெரியாது.
ஒருவரை நோக்கி குற்றம் சொல்லும் போது தான் உண்மையாக இருக்க வேண்டும். ஏற்கனவே ரஜினியை கொண்டு வர பாஜக முயற்சித்தது. அவர் கட்சி ஆரம்பிக்காததால் அதற்கு பதிலாக விஜயை ஏற்பாடு செய்ததாக சொல்கிறார்கள்.. எனக்கு தெரியவில்லை. விஜய் வருமான வரி சோதனையில் சிக்கிய போது திமுகதான் ஆதரவாக குரல் கொடுத்தது" இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications