வீக் எண்ட்! சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. கிளாம்பாக்கத்தில் தவிக்க வேண்டாம்
சென்னை: முகூர்த்த நாட்கள் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து வெள்ளிக்கிழமை 365 பஸ்களும், சனிக்கிழமை 445 பஸ்களும் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று திருச்செந்தூரில் வருகிற 27 ஆம் தேதி நடைபெற உள்ள சூரசம்ஹாரத்தையொட்டியும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
முகூர்த்த நாட்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் சென்னையில் தங்கி வேலை பார்த்து வருபவர்கள் குடும்பத்தோடு சொந்த ஊர் சென்று வருவார்கள். இதனால் சென்னையில் இருந்து வார விடுமுறை நாட்களில் செல்லும் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்பு பஸ்கள்
பஸ்கள், ரயில்களில் வழக்கத்திற்கு அதிகமாக கூட்டம் இருக்கும். இதனால் ஒரு சிலருக்கு பஸ்கள் கிடைப்பதில்லை. ரயில்களிலும் ஒரு மாதத்திற்கு முன்பே டிக்கெட் புக் ஆகிவிடும் என்பதால், தட்கல் டிக்கெட்டை நம்பி சிலர் காத்திருப்பார்கள். ஆனால் தட்கல் டிக்கெட்டும் ஓப்பன் ஆன சில நிமிடங்களிலேயே காலியாகிவிடும். இதனால் மக்களின் கடைசி நம்பிக்கை பஸ்களாக தான் இருக்கும்.
இதனை கருத்தில் கொண்டே தமிழக போக்குவரத்து கழகம் வார விடுமுறை மற்றும் பண்டிகை காலங்கள், முகூர்த்த நாட்களில் சிறப்பு பஸ்களை அறிவித்து வருகிறது. அதன்படி இந்த வார விடுமுறை மற்றும் முகூர்த்த நாளை முன்னிட்டு கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு வெள்ளிக்கிழமை 365 பஸ்களும், சனிக்கிழமை 445 பஸ்களும் இயக்கப்பட உள்ளதாக தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
நாளை, நாளை மறுநாள் சிறப்பு பஸ்கள்
நாளை (வெள்ளிக்கிழமை) முகூர்த்த நாள் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்வர். எனவே, தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து நாளை (வெள்ளிக்கிழமை) திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 365 பஸ்களும், நாளை மறுநாள் (சனிக்கிழமை) 445 பஸ்களும் இயக்கப்பட உள்ளது.
கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பஸ்கள்
சென்னை கோயம்பேட்டிலிருந்து நாளை மற்றும் நாளை மறுநாள் திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு 120 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதேபோல, பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் நாளை மற்றும் நாளை மறுநாள் பல்வேறு இடங்களுக்கும் 200 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
மாதவரத்திலிருந்து நாளை மற்றும் நாளை மறுநாள் 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மேலும், வருகிற ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
முன்பதிவு செய்துகொள்ளுங்கள்
நாளை (வெள்ளிக்கிழமை) பயணம் செய்ய 9 ஆயிரத்து 164 பயணிகளும், நாளை மறுநாள் (சனிக்கிழமை) பயணம் செய்ய 8 ஆயிரத்து 575 பயணிகளும், வருகிற 26 ஆம் தேதி பயணம் மேற்கொள்ள 16 ஆயிரத்து 108 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள்
திருச்செந்தூரில் வருகிற 27 ஆம் தேதி நடைபெற உள்ள சூரசம்ஹாரத்தையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி, சென்னை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களிலிருந்து வரும் 26 ஆம் தேதி திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
இதேபோன்று திருச்செந்தூரில் இருந்து வரும் 27 ஆம் தேதி சென்னை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பொதுமக்கள் www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications