தீபாவளி: சொந்த ஊர் போலாமா? சென்னையிலிருந்து நவம்பர் 9 ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 9ஆம் தேதி முதல் சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தீபாவளி பண்டிகை வரும் 13 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அரக்கன் நரகாசுரனை அம்பாள் வதம் செய்த தினத்தை தீபாவளி பண்டிகையாக கொண்டாடி வருகிறோம்.

தீபாவளி, பொங்கல், தொடர் விடுமுறை , பள்ளி தேர்வு விடுமுறைகளுக்கு சென்னையிலிருந்து பலர் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இந்த மக்கள் எந்த சிரமமும் இல்லாமல் சொந்த ஊர் சென்று வர ஏதுவாக சிறப்பு பேருந்துகளை அரசு சில ஆண்டுகளாக இயக்கி வருகிறது.
அந்த வகையில் சென்னையிலிருந்து நவம்பர் 9, 10, 11 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதாவது 4,675 சிறப்பு பேருந்துகளை அரசு இயக்குகிறது. அது போல் வழக்கமாக 6300 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை இரண்டும் சேர்த்து மொத்தம் சென்னையிலிருந்து 10,975 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதற்காக சென்னையில் மட்டும் ஆறு இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டன. அவை, கோயம்பேடு பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலையம், கே.கே.நகர், மாதவரம் பேருந்து நிலையம் ஆகியவை ஆகும்.
ரெட்ஹில்ஸ், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு கடற்கரை சாலை (ECR) வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் பெருநகர பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் மெப்ஸ் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி, கும்பகோணம் ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, போளூர், பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புதுச்சேரி, கடலூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில்வே பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி, திருப்பதி செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், மார்த்தாண்டம், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, அரியலூர், திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications