சரஸ்வதி பூஜை! தொடர் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு பயணித்த மக்கள்.. புதன்கிழமையும் நற்செய்தி சொன்ன அரசு
சென்னை: ஆயுதபூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறையால் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள மக்கள் சென்னை திரும்ப ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
வேலைத் தேடியும் படிப்புக்காகவும் பலர் தங்கள் சொந்த ஊர்களை விட்டு சென்னைக்கு வருகிறார்கள். இவர்கள் சென்னையில் தங்கி தங்கள் அலுவல்களை பார்க்கிறார்கள். முக்கிய பண்டிகைகள், விசேஷ நாட்கள், பொங்கல், தீபாவளி, ஆங்கில புத்தாண்டு, தொடர் விடுமுறைகள் என வந்தால் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்கிறார்கள்.

இதற்காக ரயில்களில் முன்கூட்டியே முன்பதிவு நடைபெறுகிறது. அது போல் பேருந்துகளிலு்ம முன் பதிவு செய்து கொள்ளலாம். அரசு பேருந்துகள் மட்டுமல்லாமல் தனியார் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. அது போல் கார்கள், இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்களிலும் பயணம் செய்வதுண்டு.
அந்த வகையில் இந்த முறை ஆயுதபூஜை, விஜயதசமி தொடர் விடுமுறையில் வருகிறது. அதாவது சனி, ஞாயிறு ஏற்கெனவே விடுமுறை என்ற நிலையில் திங்கள்கிழமை ஆயுதபூஜையும், செவ்வாய்க்கிழமை விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. இதனால் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு 4 நாட்களுக்கு தொடர் விடுமுறையாகும்.
இந்த விடுமுறையையொட்டி பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை முதலே படையெடுத்த வண்ணம் உள்ளார்கள். அந்த வகையில் சென்னையிலிருந்து கடந்த 20, 21 ஆகிய தேதிகளில் அரசு பேருந்துகளில் 5 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இது இல்லாமல் கொடைக்கானல், ராமேஸ்வரம் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கும் ஏராளமானோர் சென்றுள்ளனர். இந்த நிலையில் சொந்த ஊர்களுக்கு சென்றோர் சென்னை திரும்பும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
மதுரை, நெல்லை, கோவை, தஞ்சை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல நகரங்களில் இருந்து புதன்கிழமை வரை சென்னைக்கும் அது போல் மற்ற நகரங்களுக்கும் 8000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். எனவே பொதுமக்கள் கவலையடைய வேண்டாம். பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications