தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க சிறப்பு குழு அமைப்பு.. அமைச்சர் வேலுமணி தகவல்
சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் கடும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் தமிழகத்தின் நிலை குறித்து அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் பருவமழை பொய்த்த காரணத்தால் உருவாகியுள்ள தண்ணீர் பிரச்னைக்கு தீர்வாக, வறட்சி நிவாரணப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

தமிழகத்தில் சுமார் 62 சதவீதம் பருவமழை பொய்த்துள்ளது. இதன் காரணமாகவே தீவிர தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என விளக்கம் அளித்தார். கடந்தத 2017-ம் ஆண்டு கடும் வறட்சி நிலவிய போதே, மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்தது. நடப்பாண்டிலும் தண்ணீர் தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.
தற்போது நிலவி வரும் நீர் பற்றாக்குறையை போக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு பணிகளை செய்து வருகிறது. தலைநகர் சென்னைக்கு போதிய அளவு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் நாளொன்றுக்கு 520 மில்லியன் லிட்டர் தண்ணீர் தற்போது விநியோகிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
சென்னையை பொறுத்த வரை நாளொன்றுக்கு 9100 நடைகள் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பேரூராட்சி, நகராட்சி என எங்கு நீர் ஆதாரம் கிடைத்தாலும், உடனடியாக கொண்டு வந்து மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. நகர்ப்புறங்களில் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களிலும், லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது என்றார்.
தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க அதிமுக அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக 2,400 எம்எல்டி தண்ணீர் கூடுதலாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆந்திராவில் இருந்து கிடைக்க வேண்டிய நீரை பெற முதல்வர், துணை முதலவர் அம்மாநில அரசுடன் பேசி வருகின்றனர். மழை குறைந்ததால் தான் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. தண்ணீர் இருக்கும் இடங்கள் ஆராயப்பட்டு வருவதாக கூறினார்.
மேலும் பேசிய அமைச்சர் மாநிலம் முழுவதும் ஏராளமான வறட்சி நிவாரண பணிகள் நடைபெற்றுள்ளன. மத்திய நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்து, குடிநீர் திட்டங்களுக்காக ரூ.5,000 கோடி நிதி வழங்குமாறு கேட்டுள்ளோம் என்றார்.
எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது எடுத்த நடவடிக்கையை விட, தற்போதைய அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தண்ணீர் பிரச்சனையை தீர்க்க குழு அமைக்கப்பட்டு போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications