"வேறு மொபைல் பயன்படுத்துகிறாரா நடிகை கஸ்தூரி?”.. பரபர விசாரணை.. கைது செய்ய தனிப்படை தீவிரம்!
சென்னை: நடிகை கஸ்தூரியை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கஸ்தூரி மீது பல காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தலைமறைவானார் கஸ்தூரி. அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். கஸ்தூரியின் மொபைல் ஸ்விட்ச் ஆஃப் ஆன நிலையில் அவர் வேறு செல்போன் பயன்படுத்துகிறாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வன்கொடுமை தடுப்புச் சட்டம் போல பிராமணர்களைப் பாதுகாக்க ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் கடந்த 3 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். அப்போது அவர், தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.

நடிகை கஸ்தூரியின் இந்த பேச்சு தெலுங்கு மொழி பேசும் மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்திய நிலையில், நடிகை கஸ்தூரிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து, அவர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து பேட்டி அளித்தார். அதேசமயம் நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன.
அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில் சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், நடிகை கஸ்தூரி மீது 4 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கஸ்தூரியிடம் விசாரணை நடத்துவதற்கு எழும்பூர் போலீசார் முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மனை வழங்க சென்னை போயஸ் கார்டனில் உள்ள கஸ்தூரி வீட்டுக்கு போலீசார் நேற்று சென்றனர். அப்போது அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது.
இதையடுத்து, அவரது செல்போனுக்கு போலீஸார் தொடர்பு கொண்டனர். அப்போது செல்போன் 'ஸ்விட்ச் ஆஃப்' ஆகியிருந்தது. இதனால் போலீசார் சம்மனை அவரது வீட்டு சுவற்றில் ஒட்டிவிட்டுச் சென்றனர். கைது நடவடிக்கையை தவிர்க்க நடிகை கஸ்தூரி தலைமறைவாகி விட்டார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். தெலுங்கு மக்கள் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்த பின்னரும் அரசியல் உள்நோக்கத்தோடு, என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறேன். ஆகவே, எனக்கு இந்த வழக்கில் முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார் கஸ்தூரி. இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில், தலைமறைவான நடிகை கஸ்தூரியை கைது செய்ய எழும்பூர் போலீசார் 2 தனிப்படைகளை அமைத்து அவரை தேடி வருகின்றனர். அவரது செல்போன் எண் 'ஸ்விட்ச் ஆஃப்' ஆகியுள்ள நிலையில், அவர் வேறு மொபைல் எண்ணை பயன்படுத்துகிறாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications