ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கிய 5வது வக்கீல்.. அதிரடி காட்டும் தனிப்படை! யாரிந்த மாத்தூர் சிவா?
சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிவா என்ற வழக்கறிஞரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் சிவா மூலமாக கொலையாளிகளுக்கு பணம் கை மாறியது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 17வது நபராக வழக்கறிஞர் சிவா கைது செய்யப்பட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி வீட்டு அருகே நின்று கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்ப கும்பல் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதை அடுத்து அவரது உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டு, பின்னர் பெரம்பூர் அரசு பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர் உள்ளிட்ட பலர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் கொலையாளிகளாக சரணடைந்தவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த சம்பவம் அரங்கேறி இருப்பதாக கூறப்பட்டது.
கொலைக்கு மூளையாக ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு செயல்பட்டதாகவும் போலீசார் கூறினர். இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கொலைக்கு மேலும் பலர் பின்னணியில் இருந்து செயல்பட்டு இருக்கலாம் எனக் கூறப்பட்டது. மேலும், கொலைக்கு எவ்வளவு பணம் கைமாறியது? யார் யாருக்கு பணம் கொடுக்கப்பட்டது? என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தாமாக பிரமுகர் ஹரிஹரனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சம்போ செந்தில் என்ற பிரபல ரவுடிக்கு கொலையில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது கொலைக்கு பண உதவி செய்தது சம்போ செந்தில் தான் என்பதும், ஹரிஹரன் மூலமாக அந்த பணம் ஏற்கனவே கைதான அருளுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்தப் பணத்தை பிரித்து சிலருக்கும் அனுப்பி உள்ளது தெரியவந்துள்ளது.
தற்போது போலீசார் தேடி வரும் சம்போ செந்தில், சென்னையில் ஏற்கனவே பல சம்பவங்களை செய்திருக்கிறார். குறிப்பாக ரியல் எஸ்டேட் அதிபர் ரவீந்திர குமார் கொலை, முத்தியால்பேட்டையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் கூட்டாளி விஜயகுமார் கொலை செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட பல வழக்குகள் அவர் மீது இருக்கிறது. வெளியூர்களில் இருந்து கொண்டு தமிழகத்தில் கொலை திட்டங்களை தீட்டி கொடுப்பதுதான் சம்போ செந்திலின் வேலை என கூறப்படுகிறது.
அது மட்டும் அல்லாமல் வர்த்தகத்திலும் ஈடுபட்டிருக்கும் சம்போ கொலை சம்பவங்கள் மூலம் கிடைக்கும் பணத்தை அதில் முதலீடு செய்து இருக்கிறார். இந்த நிலையில் தொழில் போட்டி காரணமாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் ரவுடி சம்போ செந்தில் உத்தர பிரதேசம் மாநிலம் அல்லது வேறு மாநிலத்தில் பதுங்கி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். குறிப்பாக நொய்டாவில் அவர் இருக்கலாம் என தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் அங்கு தனிப்படை போலீசார் விரைந்து சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் சம்போ செந்திலை கைது செய்தால் மேலும் பல அதிர்ச்சி தகவல் வெளியாகும் என போலீசார் கூறுகின்றனர். இந்த நிலையில் சம்போ செந்தில் அடிக்கடி சென்னைக்குள் வந்து சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர் காவல்துறையினர்.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒரு வழக்கறிஞரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் 17வதாக மாத்தூரைச் சேர்ந்த சிவா என்ற வழக்கறிஞரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. காவல்துறையினர் தேடி வரும் சம்போ செந்திலுக்கு சிவா பண உதவி செய்ததாக கூறப்படுகிறது.
பலரிடம் மாமுலாக பெற்ற பணத்தையும். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு வழங்கப்பட்ட பணத்தையும் சம்போ செந்தில் தரப்புக்கு வழக்கறிஞர் சிவா வழங்கியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே செந்தில் தலைமறைவாக இருக்கும் நிலையில் அவரது செல்போன் எண்கள் மற்றும் கூட்டாளிகளை ரகசியமாக காவல்துறையினர் கண்காணித்து வந்த நிலையில் தான் சிவா கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
இதுவரை இந்த வழக்கில் 5 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் சம்பவம் செந்திலும் கைது செய்யப்படுவார் எனவும் அவர் கைது செய்யப்படும், போது மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications