சூரிய கிரகணம்.. தமிழகம் முழுவதும் மசூதிகளில் சிறப்பு தொழுகை! திரளாக பங்கேற்ற இஸ்லாமியர்கள்
சென்னை: சென்னை உட்பட இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் இன்று சூரிய கிரகணம் தென்பட்ட நிலையில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மசூதிகளில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.
இந்தியா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகளில் இன்று மாலை பகுதி சூரிய கிரகணம் தென்பட்டது.
இந்தியாவில் மாலை 4:29 மணிக்கு தென்படத் தொடங்கிய இந்த சூரிய கிரகணம், சூரிய அஸ்தமன நேரமான 5:42 மணியளவில் மறைந்தது.

நேரம்
மாலை 5:30 மணியளவில் முழு சூரிய கிரகணத்தையும் மக்கள் பார்த்தனர். மொத்தமாக இந்தியாவில் 1 மணி நேரம் 45 நிமிடங்கள் இந்த கிரகணம் தென்பட்டது. அசாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் சூரிய கிரகணம் தெரியவில்லை

தென் இந்தியா
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா ஆகிய தென் மாநிலங்களின் முக்கிய நகரங்களில் சூரிய கிரகணம் ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக தெரிந்து இருக்கிறது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள், கோவை, ஊட்டி உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் சூரிய கிரகணம் தெளிவாக தென்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர்.

கண்டுகளித்த மக்கள்
தமிழ்நாட்டில் சூரிய கிரகணம் தென்பட்டதற்காக புகைப்படங்களையும் பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். தொலைநோக்கிகள் உதவியுடன் இதனை பொதுமக்கள் கண்டுகளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. நாடு முழுவதும் சூரிய கிரகணத்தை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

மசூதிகள் சிறப்பு தொழுகை
இதேபோல் தமிழ்நாட்டின் பெரும்பாலான மசூதிகளிலும் சூரிய கிரகண சிறப்பு தொழுகை நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள மஸ்ஜிதுல் அக்சா பள்ளியில் நடைபெற்ற கிரகண தொழுகையில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். அதேபோல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் சிறப்பு கிரகண தொழுகை நடத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications