ஸ்பெஷல் டீமை இறக்கிய ரயில்வே.. எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்த பயணிகள் நிம்மதி
சென்னை: எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு செய்த பெட்டிக்குள் முன்பதிவு செய்யாத பயணிகள் புகுந்து அவர்களது இருக்கையை ஆக்கிரமித்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில் இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஸ்பெஷல் டீம் சோதனை செய்தது. இந்த ஸ்பெஷல் டீம் முன்பதிவு பெட்டிகளில் உரிய டிக்கெட் இன்றி ஏறிய பயணிகளை இறக்கி விட்டது.
சமீப காலமாக முன்பதிவு ரயில்களில் ஓபன் டிக்கெட் எடுத்திருந்த பயணிகள் ஆக்கிரமிப்பது அதிகரித்துள்ளது. ஸ்லீப்பர் பெட்டிகளை மட்டுமின்றி, ஏசி இரண்டாம் வகுப்பு, 3ம் வகுப்பு பெட்டிகளை ஆக்கிரமிக்கும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகின.

ரிசர்வ்டு பெட்டிகள்: பொதுவாக இது வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் தான் அதிகம் நடப்பதை பார்க்க முடியும். ஆனால் சமீப நாட்களாக தமிழகத்திற்குள் ஓடும் ரயில்களிலும் முன்பதிவு பெட்டிக்குள் அன்ரிசர்வ்டு டிக்கெட் எடுத்த பயணிகள் அத்துமீறி ஏறும் காட்சிகளை காண முடிகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஹவுரா சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு முன்பதிவு பெட்டியில் முன்பதிவு அல்லாத சாதாரண டிக்கெட்டுகள் வைத்திருந்த ஏராளமான வடமாநில பயணிகள் ஏறிவிட்டார்கள்.
பயணிகள் கூட்டம்: முன்பதிவு செய்த பயணிகள் குறிப்பிட்ட அந்த முன்பதிவு பெட்டியில் ஏற முடியாத அளவுக்கு வாசலில் முண்டியடித்தபடி அவர்கள் நின்றுவிட்டார்கள். இதன் காரணமாக அந்த பெட்டியில் பயணம் செய்ய வேண்டிய முன்பதிவு பயணிகள் ரயிலில் ஏற முடியாத நிலை ஏற்பட்டது. வைகை எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில் கூட முன்பதிவு பெட்டிக்குள் சாதாரண டிக்கெட் எடுத்த பயணிகள் ஏறிச்சென்றதை பார்க்க முடிந்தது.
இணையத்தில் வீடியோ: கடந்த சில நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்த பயணிகளே ரயிலுக்குள் ஏற முடியாத அளவுக்கு பயணிகள் ஆக்கிரமித்துக் கொண்டு நின்ற காட்சிகள் பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது தொடர்பான வீடியோக்கள் கடந்த சில வாரங்களாகவே சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவின. ரயில்வே நிர்வாகம் மெத்தனத்துடன் செயல்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டியிருந்தனர்.
அமைச்சர் உத்தரவு: இந்த நிலையில், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், முன்பதிவு பெட்டியில் சாதாரண பயணிகள் பயணம் செய்வதை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டதாக தகவல் வெளியானது. மேலும் முன்பதிவு பெட்டிகளில் எந்தவித சிரமமும் இல்லாமல் முன்பதிவு செய்த பயணிகள் பயணம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் ரயில்வே அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியிருந்தது.
களத்தில் இறங்கிய ஸ்பெஷல் டீம்: முன்பதிவு பெட்டிகளில் சாதாரண டிக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு பயணிகள் ஆக்கிரமித்துக்கொள்வதாக தொடர்ச்சியாக புகார்கள் வைக்கப்பட்டு வந்த நிலையில், சென்னையில் சிறப்பு டீமை ரயில்வே இறக்கியது. இந்த ஸ்பெஷல் டீம் முன்பதிவு பெட்டிகளில் உரிய டிக்கெட் இன்றி ஏறிய பயணிகளை இறக்கி விட்டது. ரயில்வே போலீசார், டிக்கெட் பரிசோதகர் ஆகியோர் அடங்கிய ஸ்பெஷல் டீம் எக்ஸ்பிரஸ் ரயில்களில் இந்த அதிரடி சோதனயை இன்று மேற்கொண்டது.
பயணிகள் கோரிக்கை: ரயில்வே நிர்வாகம் கண்துடைப்பு நடவடிக்கையாக இல்லாமல் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு செய்ய வேண்டும் என்று பயணிகள் கூறியுள்ளனர். அதே வேளையில் கூடுதல் ரயில்களை இயக்கி அனைத்து பயணிகளுக்கும் டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதும் ரயில் பயணிகள் கோரிக்கையாக உள்ளது. ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் முன்பதிவுக்கான டிக்கெட் இன்றி பயணம் செய்யும் பயணிகளுக்கு உடனடியாக அபராதம் விதிக்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications