சென்னை - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்.. நாளை உள்பட 4 நாட்கள் அறிவிப்பு! லிஸ்ட்டை பாருங்க
சென்னை: கோடை விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களையொட்டி மக்களின் கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு 4 நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரயில் நாளை (ஏப்ரல் 10), நாளை மறுநாள் (ஏப்ரல் 11), ஏப்ரல் 17 மற்றும் ஏப்ரல் 18 ஆகிய 4 நாட்கள் இயக்கப்பட உள்ளது.
ஏப்ரல் 10 (நாளை) மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது. அதன்பிறகு வெள்ளிக்கிழமையை தொடர்ந்து சனி, ஞாயிறு என்று தொடர்ந்து விடுமுறை வருகிறது. மேலும் பல பிளஸ் 2, பிளஸ் மாணவர்களுக்கு தேர்வு முடிவடைந்துவிட்டது. இதனால் கோடை விடுமுறையையொட்டி அனைவரும் சொந்த ஊர்களுக்கு புறப்பட தயாராகி வருகின்றனர்.

அதேபோல் அடுத்த வாரம் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு என்பது முடிந்து விடும். அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை புனித வெள்ளி வருகிறது. இதனால் ஏராளமானவர்கள் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களில் உள்ள சொந்த ஊர்களுக்கு புறப்பட தயாராகி வருகின்றனர். இதனால் சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இருமார்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து கன்னியாகுமரிக்கு 4 நாட்கள் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. நாளை (ஏப்ரல் 10), நாளை மறுநாள் (ஏப்ரல் 11), ஏப்ரல் 17 மற்றும் ஏப்ரல் 18 ஆகிய 4 நாட்கள் இந்த சிறப்பு ரயில் இயங்க உள்ளது. அதன்படி டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - கன்னியாகுமரி வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்: 06089) நாளை மற்றும் ஏப்ரல் 17 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடையும்.
மறுமார்க்கமாக கன்னியாகுமரி - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயில் (06090) நாளை மறுநாள் மற்றும் ஏப்ரல் 18 ஆகிய தேதகளில் கன்னியாகுமரியில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு என்பது இன்று தொடங்கிவிட்டது. இந்த சிறப்பு ரயில்கள் இருமார்க்கமாக அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில்களில் 12 ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டிகள், 2ம் வகுப்பு பொதுப்பெட்டிகள் 6, இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 2 (மாற்றுத்திறனாளிகளுக்கானது) இணைக்கப்பட உள்ளது என்று தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications