திருவண்ணாமலைக்கு குரு பூர்ணிமா பவுர்ணமி கிரிவலம் போறீங்களா.. ஸ்பெஷல் ரயில் இதோ!
சென்னை: ஆனி மாத பவுர்ணமியான நாளை குரு பூர்ணிமாவாக கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே நாளை வேலூர், விழுப்புரம் வரை இயக்கப்படும் ரயில்கள் திருவண்ணாமலை வரை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மிக முக்கியமான ஆன்மீக தலங்களில் திருவண்ணாமலையும் ஒன்று. இங்குள்ள அண்ணாமலையார் கோயிலுக்கு பவுர்ணமி தினத்தன்று ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இங்குள்ள மலையை பக்தர்கள் சிவனாக கருதுவதால், 14 கி.மீ சுற்றளவுகொண்ட இந்த மலையை சுற்றி வந்து வழிபடுகின்றனர். தமிழ்நாடு மட்டுமல்லாது அண்டை மாநிலங்கள், அண்டை நாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருவதால் திருவண்ணாமலை மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாத பவுர்ணமி குரு பூர்ணிமாவாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குரு பூர்ணிமா பவுர்ணமியன்று திருவண்ணாமலையில் வழக்கத்தை விட அதிகமான அளவில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பவுர்ணமி நாளை (ஜூலை 2-ம் தேதி) இரவு 7.46 மணிக்கு தொடங்கி மறுநாள் (3-ம் தேதி) இரவு 5.49 மணிக்கு நிறைவு பெறுகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது சிறந்தது என்று அண்ணாமலையார் கோயில் நிர்வாகமும் தெரிவித்திருக்கிறது.
இந்த முறை பவுர்ணமியானது ஞாயிற்றுக்கிழமை வருவதால், தமிழ்நாடு மட்டுமல்லாது ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் திருவண்ணாமலை கோயிலுக்கு கிரிவலம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இவர்கள் வந்து செல்வதற்கு வசதியாக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னையிலிருந்து வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் ரயில்கள், பவுர்ணமி அன்று திருவண்ணாமலை வரை நீடிக்கப்படும்.
அதேபோல சென்னையிலிருந்து விழுப்புரம் வரை இயக்கப்படும் ரயில் அங்கிருந்து திருவண்ணாமலைக்கு திருப்பி விடப்படும். பவுர்ணமி தினத்தில் வேலூர் கன்டோன்மென்ட் வரை வரும் ரயில் இரவு 9.50 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு கணியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணி ரோடு, போளூர், அகரம் சிப்பந்தி, துரிஞ்சாபுரம் வழியாக நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலை வந்து சேரும். அதேபோல திருவண்ணாமலையிலிருந்து ரயில் காலை 3.45 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 5.35 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட் வந்து சேரும். அதன் பின்னர் இந்த ரயில் சென்னைக்கு செல்லும்.
அதேபோல, சென்னையிலிருந்து விழுப்புரம் வந்து சேரும் ரயில், அங்கிருந்து காலை 9.15 மணிக்கு வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, அயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சநல்லூர், அண்டம்பள்ளம், தண்டரை வழியாக காலை 11 மணியளவில் திருவண்ணாமலை வந்து சேரும். பின்னர் மதியம் 12.40 மணியளவில் அங்கிருந்து புறப்படும் இந்த ரயில், பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் வந்தடையும். இது தவிர விழுப்புரம்-மயிலாடுதுறை ரயில் பவுர்ணமி தினத்தன்று மட்டும் திருவண்ணாமலை வரை நீடிக்கப்படுகிறது.
மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரம் வந்து சேரும் இந்த ரயில், இரவு 9.15 மணிக்கு விழுப்புரத்திலிருந்து புறப்பட்டு இரவு 10.45 மணிக்கு திருவண்ணாமலை வந்தடையும். பின்னர் இங்கிருந்து அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு மீண்டும் விழுப்புரம் வந்தடையும். இந்த பவுர்ணமி மட்டுமல்லாது ஜூலை மாதம்- 3,30 மற்றும் 31ம் தேதி, ஆகஸ்டு மாதம் 30 மற்றும் 31ம் தேதி, செப்டம்பர் மாதம் 28 மற்றும் 29ம் தேதி, அக்டோபர் மாதம் 27 மற்றும் 28ம் தேதி, நவம்பர் மாதம் 26 மற்றும் 27ம் தேதி, டிசம்பர் மாதம் 25 மற்றும் 26ம் தேதிகளில் பவுர்ணமி வருகிறது. எனவே இந்த தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications