3 பிள்ளைகள் இருக்காங்க.. மீண்டும் இணையும் ஏ.ஆர்.ரகுமான் - சாய்ரா பானு தம்பதி? வழக்கறிஞர் சொன்ன தகவல்
சென்னை: பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் மனைவி சாய்ரா பானு, அவரை பிரிவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இதனை ஏ.ஆர்.ரகுமானும் உறுதி செய்த நிலையில் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பாடாது என எப்போதும் கூறியதில்லை என பேசி உள்ளார் சாய்ரா பானுவின் வழக்கறிஞரான வந்தனா ஷா. இதன் மூலம் அவர்கள் மீண்டும் இணைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் துறையுலகின் பிரபல இசை அமைப்பாளராக 30 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோட்சி வருபவர் ஏ.ஆர்.ரகுமான். கடந்த 1995 ஆம் ஆண்டு சாய்ரா பானுவை திருமணம் செய்து கொண்டார் ரஹ்மான் .

இந்த தம்பதியினருக்கு ரஹீமா, கதீஜா என்ற இரு மகள்களும், அமீன் என்ற ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் திருமண பந்தத்தில் 30 ஆண்டுகளை நெருங்கி வரும் வேளையில் ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு தாங்கள் இருவரும் பிரிவதாக அறிவித்தார்.
இருவருக்கும் இடையே தீர்க்க முடியாத இடைவெளி உருவானதாக அவர் தெரிவித்திருந்தது திரையுலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பதிவிட்டிருந்த ஏ.ஆர்.ரகுமான் தங்களது திருமண பந்தம் 30 ஆண்டுகளை எட்டும் என நம்பி இருந்தோம். ஆனால் எல்லாமே கண்ணுக்கு தெரியாத முடிவாக சென்று விட்டது என எக்ஸ் பக்கத்தில் உருக்கமாக கூறியிருந்தார்.
ஏ.ஆர் ரகுமானின் அறிவிப்பு வெளியான 24 மணி நேரத்தில் அவரது இசைக் குழுவில் பேஸ் கிட்டாரிஸ்டாக பணிபுரியும் மோஹினி டே என்பவரும் தனது கணவரை பிரிவதாக அறிவித்திருந்தார். இதை அடுத்து சமூக வலைதளங்களில் ஏராளமான கட்டுக்கதைகளும் கருத்துக்களும் உலாவியது.
இந்த நிலையில் அந்த விவகாரங்களுக்கும் தங்களது பிரிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என சாய்ரா பானு தரப்பு கூறி இருந்தது. மேலும் தனது தந்தை குறித்து அவதூறான கருத்துக்கள் ஆதரமற்ற வதந்திகள் பரப்பப்படுவதாக ஏ.ஆர்.ரகுமான் மகன் அமீனும் கூறி இருந்தார். மேலும், ரகுமான் உலகின் சிறந்த மனிதர் என சாய்ரா பானுவும் கூறியிருந்தார். இந்த நிலையில், ஏ.ஆர்.ரகுமான் - சாய்ரா பானு இடையே சமரசம் ஏற்படாது என எப்போதும் தான் கூறியதில்லை எனக் கூறியிருக்கிறார் சாய்ரா பானுவின் வழக்கறிஞரான வந்தனா ஷா.
இது தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றிடம் பேசியுள்ள அவர், சாய்ரா - ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட அறிக்கையில் பிரிவின் வலியை வெளிப்படுத்தியுள்ளார்கள். விவாகரத்து முடிவை எடுப்பதற்கு முன்பாக அவர்கள் நிறைய யோசித்து இருக்க வேண்டும். ஆனால் இருவரின் விவாகரத்திற்கு பிறகு அவர்களது குழந்தைகளான அமீன், ரஹீமா, கதீஜா ஆகியோர் யாருடன் இருப்பார்கள் என்பது குறித்து முடிவு செய்யவில்லை. அவர்கள் வளர்ந்த பிள்ளைகளாக இருப்பதால் முடிவெடுக்கும் சுதந்திரம் அவர்களுக்கு இருக்கிறது.
ஆனால் இருவருக்கும் இடையே எப்போதுமே சமரசம் ஏற்படாது என ஒருபோதும் கூறவில்லை. விவாகரத்து பிரச்சனையில் ஜீவனாம்சம் குறித்து பேசப்பட்டதா என நிறைய வதந்திகள் உலாவுகிறது. சாய்ரா பண ஆசை கொண்டவர் அல்ல” என தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் குழந்தைகளுக்காக ஏஆர் ரகுமான் சாய்ரா தம்பதி மீண்டும் இணைவார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் அதற்கு சிறிது காலம் பிடிக்கும் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications