"சேதமான வீல்".. சென்னை வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்துக்கு நேர்ந்த கதி.. திக்திக் நிமிடங்கள்.. என்னாச்சு?
சென்னை: ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து சென்னை நோக்கி வானில் வந்து கொண்டிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் சக்கரம் சேதமடைந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விமானம் சென்னையை நெருங்கிய நிலையில் சேதமடைந்த சக்கரத்துடன் விமானி சாதுர்யமாக விமானத்தை தரையிறக்கியதால் பயணிகள், விமான பணியாளர்கள் அனைவரும் பத்திரமாக உயிர் தப்பினர்.
வானில் பறப்பதற்கு முன்பே ஒவ்வொரு விமானங்களிலும் ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா? என்று பரிசோதிக்கப்படும். ஏனென்றால் வானில் பறக்கும்போது ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அது பயணிகளின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடும்.

இருப்பினும் கூட பல சந்தர்ப்பங்களில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதும், அதன்பிறகு அவசர அவசரமாக அருகே உள்ள விமான நிலையங்களில் தரையிறங்குவதும் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
இந்நிலையில் தான் அப்படியொரு சம்பவம் சென்னையில் இன்று அதிகாலையில் நடந்துள்ளது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரில் இருந்து இன்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான SG9046 விமானம் புறப்பட்டது. விமானத்தில் பயணிகள், விமான பணியாளர்கள் இருந்தனர். இந்த விமானம் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.
இன்று அதிகாலையில் சென்னையை விமான நிலையத்தை விமானம் நெருங்கியது. அப்போது திடீரென்று விமானத்தில் பிரச்சனை ஏற்பட்டது. இதை உணர்ந்த விமானி விமானத்தை உடனடியாக அவசர அவசரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்க வேண்டும் என்று கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்பினார். அதன்பிறகு அவசர அவசரமாக ஸ்பைஸ்ஜெட் விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது. எந்த அசம்பாவித சம்பவமும் ஏற்படவில்லை. விமானத்தில் இருந்த பணியாளர்கள், பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
மேலும் விமானம் அவசர அவசரமாக தரையிறங்கியது பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது விமானத்தின் சக்கரம் சேதமடைந்து இருந்தது தெரியவந்தது. விமானம் தரையிறங்கும்போதும், தரையில் இருந்து விமானம் வானில் பறக்கும்போதும் இந்த சக்கரங்கள் தான் முக்கியம். இருப்பினும் சேதமடைந்த சக்கரத்துடன் விமானத்தை விமானிகள் பத்திரமாக தரையிறக்கி அனைவரின் உயிரையும் காப்பாற்றி உள்ளனர்.












Click it and Unblock the Notifications