புறம்போக்கு நிலம், மின்வழித்தடம்..மக்களுக்கு சேவை செய்யவே அரசு அதிகாரிகள் உள்ளீர்கள்: நீதிபதி அதிரடி
சென்னை: தங்களது நிலத்தில், தனியார் நிறுவனங்கள் மின்கோபுர வழித்தடங்களை அமைத்துள்ளதாக கூறி நில உரிமையாளர்கள் 2 பேர் சென்னை ஹைகோர்ட்டுக்கு சென்றுள்ளனர். இதுகுறித்து நீதிபதி அதிரடி உத்தரவினை பிறப்பித்திருக்கிறார்.
சென்னை உள்பட பல பகுதிகளில் அரசின் புறம்போக்கு நிலங்கள் மற்றும் நீர்நிலைகளில் ஆக்கிரமித்து ஒரு தரப்பினர், வீடுகள், கட்டிடங்கள், கம்பெனிகள் கட்டி விடுகிறார்கள்.. இவர்களுக்கு குடிநீர், மின்சாரம் உள்பட அனைத்து வசதிகளையும் எந்தவித முறையான ஆவணமின்றி சில அதிகாரிகளும் வழங்கி வருவதாக புகார்கள் எழுந்தன.

மின் இணைப்பு: இதையடுத்து, அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களுக்கு இனி தண்ணீர் இணைப்போ, மின் இணைப்போ வழங்கக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திலும் 2 வருடங்களுக்கு முன்பு பொதுநல வழக்கு ஒன்றும் தொடரப்பட்டிருந்தது.
இந்நிலையில், மின்வழி தடங்களை மாற்றும் செலவை மக்கள் மீது சுமத்தக்கூடாது என்று ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.. செங்கல்பட்டு மாவட்டம் இளந்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர்கள் சங்கர் மற்றும் ஜெயலட்சுமி.
எதிர்ப்புகள்: இவர்களுக்கு சொந்தமான நிலம் இந்த தோப்பில் உள்ளது.. ஆனால், இவர்களின் தோப்பு வழியாக, உயர் அழுத்த மின்கோபுர வழித்தடங்களை, தனியார் நிறுவனங்கள் அமைத்திருக்கிறார்களாம்.. எனவே, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நில உரிமையாளர்களான சங்கர் மற்றும் ஜெயலட்சுமி இருவருமே வழக்கு தொடர்ந்தனர்.
புறம்போக்கு நிலம் பக்கத்திலேயே இருந்தும்கூட, 4 தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக அரசு நடந்துள்ளதாகவும், மின்கோபுர வழித்தடங்களை மாற்றி அமைக்க வேண்டுமென்றும் தங்கள் மனுவில் நில உரிமையாளர்கள் இருவருமே கேட்டுக் கொண்டிருந்தனர்.
மின்கோபுர வழித்தடம்: இந்த மனுக்களானது, நீதிபதி எம்.தண்டபாணி முன், விசாரணைக்கு வந்தன.. அப்போது, மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜராகி, ''ஆட்சேபனை தெரிவித்த நிலையிலும், மின்கோபுர வழித்தடங்களை தனியார் நிறுவனங்கள் அமைத்திருக்கின்றன.. எனவே, வழித்தடங்களை மாற்ற வேண்டுமானால், அதற்கான செலவாக, 81.11 லட்சம் ரூபாய் செலுத்தும்படி கேட்பது நியாயமற்றது. ஒரு ரூபாய் கூட அரசுக்கு செலுத்த வேண்டியதில்லை" என்றார்.
இதையடுத்து, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல், "ஏற்கனவே மின்கோபுர வழித்தடங்கள் அமைக்கப்பட்டு விட்டன. அவற்றை மாற்ற மனுதாரர்கள் விரும்பினால், அதற்குரிய செலவுத்தொகையை ஏற்க வேண்டும்" என்றார்.
நீதிபதி உத்தரவு: இந்த 2 தரப்பு வாதங்களுக்குப்பின், நீதிபதி தண்டபாணி, "தனியார் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்க, மின்கோபுர வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.. மற்றபடி இது பொதுநோக்கத்துக்காக கிடையாது.. தனியார் நிறுவனங்களின் நலனுக்காக மட்டுமே, இந்த வழித்தடங்கள் அமைக்கப்படும்போது, பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாமல் பார்க்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது..
பொதுமக்களுக்கு சேவை ஆற்றுவதே, அரசு அதிகாரிகளின் கடமையே தவிர, தனியார் நிறுவனங்களின் விருப்பத்துக்கு ஏற்ப செயல்படுவது கிடையாது. வழித்தடங்களை மாற்றி அமைத்தால், இழப்பீட்டுத் தொகை தங்களுக்கு வேண்டாம் என்று மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, மாற்றுப்பாதை இருக்கும்போது, மனுதாரர்களின் நிலம் வழியாக அமைத்திருக்கிறார்கள்.. இதனை எப்படி ஏற்க முடியும்? கோர்ட் இதனை ஏற்காது. அனுமதி அளித்த கலெக்டரின் உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது.
அதிரடி தீர்ப்பு: எனவே, மனுதாரர்கள் உள்ளிட்ட தனிநபர்களின் நிலங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல், மின்கோபுர வழித்தடங்களை மாற்றி அமைக்க வேண்டும். தனிநபர்கள் மீது செலவு தொகையை சுமத்தக்கூடாது. இன்னும் 8 வாரங்களுக்குள் இந்த நடவடிக்கையை முடிக்க வேண்டும்" என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications