”தங்கச்சுரங்கமே கிடைச்சுருச்சு” ஹைதராபாத் ரசிகர்கள் கொண்டாட்டம்.. வெஸ்ட் இண்டீஸை வெளுத்த கிளாஸன்!
சென்னை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா வீரர் ஹெய்ன்ரிக் கிளாஸன் அதிரடியாக சதம் விளாசியது ஹைதராபாத் அணி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அதில் மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 48.2 ஓவர்களில் 260 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதனைத் தொடர்ந்து 261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியது.

வெளுத்து வாங்கிய கிளாஸன்
இதில் தென்னாப்பிரிக்கா அணியின் விக்கெட் கீப்பர் ஹெய்ன்ரிக் கிளாஸன் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். 61 பந்துகளில் 15 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் 119 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரது அதிரடியால் தென்னாப்பிரிக்கா அணி9 29.3 ஓவர்களில் இலக்கை எட்டி அசாத்திய வெற்றியை பெற்றது. ஹெய்ன்ரிக் கிளாஸனின் அதிரடியை கண்டு தென்னாப்பிரிக்கா ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தார்களோ இல்லையோ சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹைதராபாத் அணியில் கிளாஸன்
அடுத்த வாரத்தில் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தொடங்க உள்ள நிலையில், மரண மாஸ் ஃபார்மில் கிளாஸன் இருப்பது ஹைதராபாத் அணி ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. கடந்த ஐபிஎல் தொடரில் நிக்கோலஸ் பூரன் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், அவரை ஹைதராபாத் அணி நிர்வாகம் வெளியேற்றியது. இதனால் அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பராக தென்னாப்பிரிக்கா அணியின் ஹெய்ன்ரிக் கிளாஸனை ஒப்பந்தம் செய்தது. டெல்லி அணியுடன் போட்டிபோட்டு ரூ.5.5 கோடிக்கு கிளாஸனை ஹைதராபாத் அணி வாங்கியது.

கேப்டன் மார்கரன்
அதுமட்டுமல்லாமல் தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் மார்க்ரமையே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியின் கேப்டனாக செயல்பட்டு கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இதனால் கிளாஸன் அனைத்து ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடுவதற்கு வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்திய மண்ணில் கிளாஸனின் பேட்டிங் வழக்கமாக சிறப்பாக இருக்கும்.

மிடில் ஆர்டர் தயார்
தற்போது உச்சபட்ச ஃபார்மில் இருப்பதால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் ஏற்கனவே மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, மார்கோ யான்சன், மார்க்ரம், நடராஜன், அபிஷேக் சர்மா, சமத், உம்ரான் மாலிக் என்று அணி சிறப்பாக உள்ளது. இவர்களோடு கிளாஸன் மிடில் ஆர்டரில் இணைவதால், ஹைதராபாத் அணியின் பலம் உச்சத்தை அடைந்துள்ளது. இதனை குறிப்பிட்டு ஹைதராபாத் அணி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications