2024 இல் சுனாமி வரும்.. இலங்கை தீவே காணாமல் போகும்.. உலக கோப்பையை கணித்த நடிகர் அனுமோகன் ஆரூடம்
சென்னை: அடுத்த ஆண்டு இறுதிக்குள் சுனாமி வரும் என்றும் இலங்கை எனும் தீவே காணாமல் போய்விடும் என்றும் நடிகர் அனுமோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நடிகர் அனுமோகன் கோவையைச் சேர்ந்தவர். இவர் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்துள்ளார். இவர் 1980 களில் இயக்குநராக அறிமுகமானார். இவர் இது ஒரு தொடர் கதை, நினைவு சின்னம், மேட்டுப்பட்டி மிராசு, அண்ணன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இவர் இயக்கிக் கொண்டே பல படங்களில் நடிக்கவும் செய்தார். கொங்கு தமிழில் இவர் பேசும் வசனங்கள் அருமையாக இருக்கும். அர்ச்சனை பூக்கள், விஐபி, மூவேந்தர், நட்புக்காக. மன்னவரு சின்னவரு, படையப்பா, சுயம்வரம், மின்சார கண்ணா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
படையப்பா படத்தில் வரும் காமெடி மூலம் இவர் மிகவும் பிரபலமானார். அந்த பாம்பு புத்துக்குள்ள கைய விட்டீங்களே கடிக்கலையா என ரஜினிகாந்தை எங்கு பார்த்தாலும் கேட்டுக் கொண்டு வருவார். இவர் அண்மைக்காலமாக சித்தர் ஏட்டுக்குறிப்புகளை கொண்டு சில விஷயங்களை கூறி வருகிறார். அந்த வகையில் அவருக்கு படவாய்ப்பு கிடைத்தது எப்படி என கூறியுள்ளார்.
அதில் எனக்கு 2, 3 ஆண்டுகளுக்கு பட வாய்ப்பு இல்லாமல் இருந்தது. என் மனைவி சென்னை பனகல் பார்க்கில் உள்ள முப்பாத்தம்மன் வேண்டிக் கொண்டு 9 வாரங்களுக்கு பாம்பு புற்றுக்கு பால் ஊற்றியதால் படையப்பா படத்தில் வாய்ப்பு கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். அது போல் அவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்தும் சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.
அதில் இந்தியா உலக கோப்பையை வெல்லும். இப்போது 10 ஆவது உலக கோப்பை. இனி 25 க்கு பிறகு தொடர்ச்சியாக இந்தியா ஜெயித்துக் கொண்டே இருக்கும். 30 போட்டிகள் வரை தொடர்ந்து வெல்வார்கள் என்றார். ஆனால் உலக கோப்பையில் இந்தியா தோல்வி அடைந்துவிட்டது. இதையடுத்து அவரை நெட்டிசன்கள் டிரோல் செய்து வருகிறார்கள்.
அது போல் அவர் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் 31.12. 2024 க்குள் ஒரு பெரிய அழிவு வரும். இலங்கை எனும் தீவு சுனாமியால் காணாமல் போகும். இது சித்தர் ஏட்டுக் குறிப்புகளில் இருக்கிறது. ஏற்கெனவே இலங்கை சுனாமி வந்ததால்தான் தமிழ்நாட்டை விட்டு பிரிந்து தனித்து தீவாக காணப்படுகிறது. 2004 ஆம் ஆண்டு சுனாமி வரும் என சொன்னோம். அதை யாரும் நம்பவில்லை. எனவே இலங்கை சுனாமியால் இந்த முறை அழியும். மேலும், சுனாமி காரணமாக, சென்னை தேனாம்பேட்டை வரை கடலாக மாறிவிடும் என்றும் பீதியூட்டும்வகையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications