இலங்கைத் தமிழர்களுக்கு விரைவில் விடிவுகாலம்.. சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் உறுதி
சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கு தமிழக அரசு விரைவில் விடிவுகாலத்தை ஏற்படுத்தித் தரும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழக பட்ஜெட் கடந்த 18ஆம் தேதி தாக்கலானது. இதையொட்டி வேளாண் துறைக்கான தனிபட்ஜெட்டும் அடுத்த நாளே தாக்கலானது. இந்த நிலையில் மார்ச் 21, 22, 23 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.
கடைசி நாளான விவாதத்தின் போது முதல்வர் ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறுகையில் இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் இலங்கை தமிழர்கள் தமிழகத்திற்கு வரத் தொடங்கிவிட்டார்கள். அவர்களுக்கு தமிழக அரசு விரைவில் விடிவுகாலத்தை ஏற்படுத்தி தரும்.

ஈழத் தமிழர்கள் பிரச்சினை
ஈழத் தமிழர்கள் பிரச்சினையை சட்டரீதியாக கையாளுவது குறித்து மத்திய அரசு, அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும் என்றார் முதல்வர். மேலும் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதல் மாநிலம் என்று சொல்லக் கூடிய அளவுக்கு வளர்ச்சி பெற வேண்டும். அதற்கு துபாய் பயணம் உதவும் என்றும் முதல்வர் தெரிவித்திருந்தார்.

குழந்தைகளுக்கு பால் வாங்க முடியவில்லை
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் இலங்கை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை 3 மடங்கு உயர்ந்துவிட்டது. இதனால் குழந்தைகளுக்கு பால் வாங்கக் கூட முடியாமல் இருக்கிறார்கள். மேலும் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் பல கி.மீ. நீள வரிசையில் மக்கள் காத்துக் கிடக்கும் சூழல் நிலவுகிறது. இதனால் ஈழத் தமிழர்கள் உணவு உண்ண முடியாமல் அதிக விலை கொடுத்தும் பிரட்டை மட்டுமே சாப்பிடும் நிலை உள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை
இதனால் ஈழத் தமிழர்கள் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு அகதிகளாக வருகிறார்கள். அவ்வாறு வரும் அவர்கள் மீது வழக்குப் பதியாமல் அவர்களின் வாழ்வாதாரத்தை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்திருந்தது.

இரண்டாவது போர்
இதுகுறித்து விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் இலங்கையில் இரண்டாது போர் தொடங்கி உள்ளது.
அது தான் பொருளாதார யுத்தம்.
இந்த போரிலும் பெரிதும் தமிழீழத்தமிழர்களே பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
சிங்கள இனஒடுக்குமுறையால்
நாட்டை விட்டு தமிழர்களே அகதிகளாக வெளியேறினர்.

ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரம்
இப்போது,பொருளாதார நெருக்கடியால் தமிழர்களே அகதிகளாக தமிழ்நாட்டுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடியால் தமிழ்நாட்டுக்கு வருகை தரும் ஈழத்தமிழர்களை மாண்புமிகு முதல்வர்
@CMOTamilnadu வரவேற்று வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும். ஏற்கனவே உள்ள முகாம்களுக்கு அனுப்பாமல் தனி முகாம்களை அமைக்க வேண்டும்.
வழக்கு பதிவு செய்து சிறைப்படுத்தக்கூடாது என கோரிக்கை விடுத்திருந்தார்.












Click it and Unblock the Notifications