கோவில் குளங்களில் பக்தர்கள் மூழ்கி உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கை.. இந்து அறநிலையத்துறை பதில்
சென்னை: கோவில் குளங்களில் பக்தர்கள் மூழ்கி உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் பணியாளர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலைய துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
தமிழகத்தில் நீரில் மூழ்கி உயிரிழப்பதை தடுக்கும் வகையில் கடற்கரைகள், சுற்றுலா தலங்கள், கோவில் குளங்கள், அருவிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உருவாக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த கோடீஸ்வரி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்..

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் வினித் கோத்தாரி,சுரேஷ்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது...
'
அந்த அறிக்கையில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில் திருக்குளங்களின் அனைத்து வாயில்களையும் பூட்டி வைக்கவும், குளத்தை சுற்றி தடுப்பு வேலி அமைக்கவும், பக்தர்கள் குளத்தின் அருகில் செல்லாதவாறு கோவில் பணியாளர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுமாறும், படிக்கட்டுகளை தாண்டி பக்தர்கள் செல்லாதவாறு தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும் என உத்தரவிடப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
அதே போல,குளங்களின் படிக்கட்டுகளை பாதுகாப்பாகவும்,பாசிகள் தேங்காமல் தூய்மையாக பராமரிக்குமாறும், பாதுகாப்பற்ற பகுதி குறித்த எச்சரிக்கை பலகை வைக்க அறிவுறுத்த பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தெப்பத் திருவிழாவின் போது தீயணைப்பு மற்றும் மீட்பு பணி குழுவினை பணியமர்த்துமாறும், நீச்சல் வீரர்களை திருக்குளத்தின் அருகே உதவிக்காக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்த பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
மேலும்,ஒவ்வொரு திருக்கோவில்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், 01.01.2018 முதல் 30.11.2019 வரை கோவில் தெப்பக்குளங்களில் உயிரிழந்தவர்கள் விவரம் மற்றும் காரணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட பட்டுள்ளதாகவும், அதே போல கன்னியாகுமரி ராமேஸ்வரம் மற்றும் திருச்செந்தூர் உள்ளிட்ட கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள கோவில்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாகவும், அதனை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் எனவும் கோரப்பட்டது..
தொடர்ந்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கனகராஜ், சென்னை, நாகப்பட்டினம் தேனி, தென்காசி என 16 மாவட்டங்களில் கடந்த 4.12 2017 முதல் 28.1.2020 வரை கடற்கரை,ஏரி குளங்கள் ஆகியவற்றில் மூழ்கி 43 பேர் உயிரிழந்திருப்பதாக பத்திரிகை செய்திகள் வாயிலாக கிடைத்த விவரங்களை சமர்ப்பித்தார். தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள ஏரி, குளங்கள் ஆகியவற்றில் மூழ்கி உயிர் இழப்புகள் ஏற்படுவதை தடுக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை 2 வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளனர்...












Click it and Unblock the Notifications